பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நித்யா மேனன். அவர் அளித்த பேட்டி:-
கேள்வி:- மலையாள படங்களில் காட்டும் கவனத்தை மற்ற மொழிகளில் காட்டுவதில்லையே?
பதில்:- அப்படி இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கதையும் என்னுடைய வேடமும் மிகவும் முக்கியம். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் சுவாரசியமான படங்களில் மட்டும்தான் நடிக்க விரும்புகிறேன்.
கே:- என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?
ப:- அந்த படத்தில் ஒப்பந்தமானதும் நடித்து முடித்ததும் சில நாட்களில் முடிந்துவிட்டது. தயாராவதற்கான நேரம் இல்லை. பொதுவாக இது போன்ற நிஜ வேடங்களில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்கவே விரும்புவேன். இதில் அப்படி அமையவில்லை.
ஆனாலும் நன்றாக வந்து இருக்கிறது. எந்த ஒரு வேடத்திலும் அந்த வேடமாக மட்டுமே திரையில் தெரிவதை விரும்புகிறேன். சாவித்திரியின் கதை என்னை பிரதிபலிப்பது போலவே இருந்தது.
கே:- ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்?
ப:- ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் வேடத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை. சாதாரணமாக நடித்துவிட முடியாது. படத்தில் எந்த இடத்திலும் நித்யா மேனன் தெரியக்கூடாது. அந்த பொறுப்பும் கடமையும் இயக்குனருக்கு மட்டுமல்ல நடிக்கும் நடிகைக்கும் இருக்கிறது. பிரியதர்ஷினி கதையை சொல்லும்போதே அவரது அர்ப்பணிப்பு புரிந்துவிட்டது.
அதனால்தான் சம்மதித்தேன். உடலளவிலும் மனதளவிலும் ஜெயலலிதாவாக நான் மாற வேண்டியிருக்கிறது. அவரது முழு வாழ்க்கையையும் திரைக்கு கொண்டு வர இருக்கிறோம்.
ப:- இரண்டு மலையாள படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். அவை தவிர அக்ஷய் குமாருடன் மிஷன் மங்கள் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
கே:- இந்தியில் நடிப்பது சவாலாக இருக்கிறதா?
ப:- இதில் சவால் எதுவும் இல்லை. புது மொழி, புது சூழலில் பணிபுரிகிறேன். கதை கேட்கும்போதே ஒரு ரசிகையாக கேட்பேன். அப்படி என்னை வியக்க வைத்த கதை இது.
சந்திரனுக்கு இந்திய விண்கலம் ஒன்று செலுத்தப்பட்டது என்பது வரலாற்று சாதனை. அந்த சாதனையை படமாக்கும்போது அந்த படத்தில் நான் இடம்பெற்று இருப்பது பெருமையான விஷயம்.
கே:- வரிசையாக படங்கள். சோர்வடையவில்லையா?
ப:- இல்லை. நான் இந்த துறையை அனுபவித்து பணிபுரிகிறேன். சின்ன வேடத்தில் நடித்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்து நடிக்கிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.