நடிகர் ராகவா லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய படங்களின் அறிமுக விழா நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது.
விழாவில் வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர்கள் ரூபாய் 1 கோடியை ராகவா லாரன்சின் சம்பள முன்பணமாக மேடையில் அவரிடம் அளித்தனர். அதனை வாங்கிய லாரன்ஸ் அந்தப் பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி உதவி மற்றும் அப்துல்கலாம் பெயரில் பசுமை இயக்கத் திட்டம், ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.
இதற்காக 100 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களிடம் இந்தப் பணத்தை வழங்கப் போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
100 இளைஞர்கள்
நூறு இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் ஆளுக்கு ஒருஇலட்சம் கொடுத்துவிடுவேன். அவர்கள் உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவலாம் என்று ராகவா லாரன்ஸ் பகிரங்கமாக மேடையில் அறிவித்தார்.
தங்கள் பெயருக்கு முன்னால் அப்துல்கலாம்
அந்த இளைஞர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் அப்துல்கலாம் என்கிற பெயரைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று திட்டத்தைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.
அப்துல்கலாம் விருது வாங்க ஆசை
வரும் காலங்களில், அந்த இளைஞர்கள் மட்டுமின்றி நானும் தமிழகஅரசு அப்துல்கலாம் பெயரில் அறிவித்துள்ள விருதை வாங்க ஆசைப்படுகிறேன் என்று லாரன்ஸ் தனது ஆசையைப் பற்றி மனந்திறந்து கூறினார்.
முதல் ஆளாக இடம்பிடித்த டிடி
தங்கத் தமிழ்நாட்டில் டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற மக்களின் எண்ணத்தை மாற்றி டிடி என்றால் திவ்யதர்ஷினி என்று அறியச் செய்த பெருமை விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடியையே சேரும். இந்தப் படவிழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சின்னத்திரை பிரபலம் டிடி, உடனே அந்த நூறுபேரில் ஒருவராகத் தானும் சேர்ந்துகொள்வதாக மேடையிலேயே லாரன்சிடம் விண்ணப்பித்தார்.
சம்மதம் சொன்ன லாரன்ஸ்
டிடி கேட்டதை உடனே ஒப்புக்கொண்ட லாரன்ஸ், டிடி யின் உதவி செய்யும் மனம் எனக்குத் தெரியும் எனவே அவரை நம்பிப்பணம் கொடுக்கலாம். நான் முதல் ஒருஇலட்சத்தை அவரிடம் தருகிறேன் என்று கூறினார்.
முறையான கணக்கு தருவேன்
ராகவா லாரன்சிற்கு நன்றி சொன்ன டிடி ஒரு இலட்சத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் உங்களுக்கு முறையான கணக்கு வந்து சேரும், என்று கூறி தனது வாக்குறுதியை லாரன்சிற்கு தெரிவித்தார்.