சமூக பணியாளர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவரான சுலகிட்டி நரசம்மா நேற்று காலமானதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“கர்நாடகாவின் பெங்களூருவில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுலகிட்டி நரசம்மா. இவர் தனது கிராம பகுதியில் இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்துள்ளார்.
இவருக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
கடந்த 1920 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். பெண்களுக்கு கர்ப்பகால சேவைகளை இலவச அடிப்படையில் செய்து வந்துள்ளார்.
இவரது சேவைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தும்கூர் பல்கலை கழகம் கவுரவ டொக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிலையில் உடல் நலக் குறைவால் அவர் நேற்று காலமானார்” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.