மனைவி ஓடிப்போனதால், முடக்கு வாதத்தால் அவதிப்படும் தனது குழந்தை சாதனாவை பார்த்துக்கொள்ள இந்தியா வருகிறார் மம்முட்டி. இங்கு வந்த பிறகு தான், தனது குடும்பத்தினருக்கே தனது மகள் தொந்தரவாக இருப்பதை உணர்கிறார். இதையடுத்து சாதனாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில், இயற்கை சூழலில் இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்கிறார்.
தாய் பாசத்தால் ஏங்கும் சாதனாவின் அனைத்து தேவைகளையும் ஒரு தந்தையாக நிறைவேற்றி வைக்கவும் முயற்சிக்கிறார். தேனப்பனும், ஜே.எஸ்.கே சதீஷும் மம்முட்டி குடியிறுக்கும் வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த நிலையில், மம்முட்டி வீட்டிற்கு வேலைக்காரியாக வரும் அஞ்சலி, சாதனாவை தன் பெண்ணாகவே கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். இதற்கிடையே மோசடி மூலம் தேனப்பன் மம்முட்டியின் வீட்டை எழுதி வாங்கிவிடுகிறார். வீட்டை இழந்த நிலையில், சாதனாவுடன் சென்னை திரும்புகிறார் மம்முட்டி.
பரபரப்பாக இயங்கும் சென்னை சூழலில் மம்முட்டி தனது குழந்தையை எப்படி கவனித்துக் கொள்கிறார்? குழந்தையின் தேவையை நிறைவேற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்பதே பேரன்பின் மீதிக்கதை.
10 வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான கதையின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மம்முட்டிக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் மாஸான நடிகராக இருக்கும் மம்முட்டி இதுபோன்ற ஒரு படத்தில் நடித்தது அவரது தரம் மற்றும் நற்சிந்தனையை காட்டுகிறது. ராமின் தேவையை ஒரு சாதாரண அப்பாவாக மம்முட்டி நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது குழந்தையின் தேவையை பூர்த்தி செய்யும், தனது மகள் படும் கஷ்டங்களை பார்த்து வேதனைப்படும் ஒரு தந்தையின் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார்.
தங்கமீன்கள் படத்திற்கு பிறகு சாதனா இதில் முற்றிலும் மாறுபட்ட, யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மனதில் பதிகிறார். கள்ளங்கபடமற்ற காதல், பேரன்பு, ஆசை, பாசம், இரக்கம் என அவளது உலகம் புதிரானது, வித்தியாசமானது. மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார். தனக்காக தனி உலகம் இருந்தாலும், அதில் தனக்கும் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் உள்ளன என்பதை புரிய வைக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சாதனாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்க மீன்கள் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற சாதனாவுக்கு, இந்த படத்திற்காக மற்றுமொரு தேசிய விருது கொடுத்தாலும் போதாது. தங்கமீன்கள் சாதனா இனி பேரன்பின் சாதனாவாக மிளிர்வார்.
அஞ்சலி குறைவான நேரமே வந்தாலும், இதுவரை நடிக்காத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருநங்கை அஞ்சலி அமீர், தங்களை போன்றவர்களுக்கும் அன்பு, பாசம் உண்டு என்பதை உணர்த்திச் செல்கிறார்.
வாழ்க்கையின் எதார்த்தத்தை திரையில் அப்பட்டமாக காட்டுவதில் ராம் ஆகச்சிறந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் யாரும் தொடாத, எளிதில் தொட முடியாத ஒரு கதைக்கருவை பேரன்பாக படைத்திருக்கும் ராமுக்கு பாராட்டுக்கள். படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையை விட்டுச் செல்லும் தாய், தாய் பாசத்தால் ஏங்கும் குழந்தை, குழந்தையை அரவணைக்க துடிக்கும் தந்தை என காட்சிகளை மனதில் பதிய வைக்கிறார். தன் மீது பாசம் காட்டும் அனைவரும் தன்னை விட்டு விலகிச் செல்வதை விரும்பாத குழந்தையின் கள்ளங்கபடமற்ற பாசம் உயர்வானது என்பதை புரியவைக்கிறார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை உணர வைத்திருக்கிறார். இயற்கையை பல அத்தியாயங்களாக காண்பித்திருக்கும் ராம் முடிவில் இயற்கையின் பேரன்பில் மகிழ்ச்சியடைகிறார். படத்தின் வசனங்கள் அருமை. படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் திரைக்கு கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த சூரிய பிரதாமனின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம். ராமின் சிறந்த படைப்பாக பேரன்பு பேசப்படும்.
முதல் பாதியில் யுவனின் மெல்லிசை மனதை வருட, இரண்டாவது பாதியில் பாடல்களால் மனதை குலைக்கிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் எழில் கொஞ்சம் விதமாக உள்ளது.
மொத்தத்தில் `பேரன்பு´ இயக்குநரின் பெயர் சொல்லும்.