நாயகன் சரவணனும் நாயகி அனு கிருஷ்ணாவும் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு ஒரு பங்களாவிற்கு வசித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் மீது விருப்பம் இல்லாததால், பிரிய நினைக்கிறார்கள்.
இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. உண்மையில் பேய் இருந்ததா? பேய் இருப்பது போல் பிம்பத்தை உருவாக்கியது யார்? இருவரும் பிரிய நினைத்தது நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சரவணன், இதற்கு முன் அகிலன், சரித்திரம் பேசு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் அறிமுக நடிகர் போல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா, கணவன் மீது வெறுப்பு காட்டும் காட்சிகளிலும், பேய்க்கு பயப்படும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிங்கம்புலி வரும் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. குமரேசன், கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
வழக்கமான பேய் கதையை மையமாக வைத்து 10 மணி நேரத்திற்குள் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.செல்வா. இயக்குவதோடு மட்டுமில்லாமல், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சாதனைக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் லாஜிக் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு சுமார் ரகம். ராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
மொத்தத்தில் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ பயம் இல்லை.