மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சினை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் இதற்கு முன் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
‘லீவிங் நெவர்லேண்ட்’ என்கிற ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் பாரிஸ் ஜாக்சன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்தார். இந்த தகவலை பரப்பியவர்கள் ‘பொய்யர்கள்’ என அவர் சாடியுள்ளார்.