‘மவுனமான நேரம், இளமனதில் என்ன பாரம்?’ பாடலை பாடும்போதே க்யூட்டான ஜெயப்பிரதா நினைவுக்கு வருகிறார் இல்லையா? You must be old.
ஜெயப்பிரதாவின் மகனே ஹீரோ ஆகிவிட்டார். இவரது பெயரும் சித்தார்த் தான். பெயர் குழப்பத்தை தவிர்க்க சினிமாவுக்காக சித்து ஆகியிருக்கிறார். சிம்புவின் பால்யகாலத்து தோழர். டி.ராஜேந்தர் வீட்டுக்கு எதிர்வீடுதான்.
“தமிழில் ‘சத்யம்’ என்று நான் இயக்கிய விஷாலின் படம், தெலுங்கில் ‘சல்யூட்’ என்று ரிலீஸ் ஆகி நன்றாகப் போனது. அதை தற்செயலாகப் பார்த்த ஜெயப்பிரதா, விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டியிடம் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். அவரிடம் எண் வாங்கி பேசினார். அவர்தான் பேசுகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
இந்தியாவே கொண்டாடிய நடிகை ஆயிற்றே? ‘இஷ்க்’ என்று தெலுங்கில் ஒரு படம் சூப்பராக ஓடுகிறது. தமிழில் என் மகனை வைத்து ரீமேக் செய்ய நினைக்கிறேன். நீங்கள் இயக்கித்தர முடியுமா என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா? உடனே வேலையில் இறங்கிவிட்டேன்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குனர் ஏ.ஆர். ராஜசேகர். பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் இவர். சுரேஷ்கிருஷ்ணாவின் மாணவர்.
“சத்யத்துக்கு அப்புறம் பார்க்கவே முடியலையே?”
“சினிமாவுலே வர்றதுக்கு முன்னாடி பி.பி.சி., நேஷனல் ஜியாகிரபி மாதிரி சேனல்களில் வேலை பார்த்தேன். டாக்குமெண்டரி மீதான என்னுடைய ஆர்வம், ‘சத்யம்’ இயக்கினதுக்குப் பிறகும் குறையாமல் அப்படியே இருந்தது. அப்போதான் ‘ஐ ஆம் நாட் கங்கா’ என்கிற இண்டோ-இங்கிலீஷ் மூவியை இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. பிலிம் ஃபெஸ்டிவல்களில் கலந்துக்கறதுக்குன்னே எடுத்த படம் இது.
கங்கை உற்பத்தியாகும் கோமுக்கில் ஆரம்பிச்சி, கடலில் கலக்கும் கொல்கத்தா சாகர் ஐலேண்ட் வரை அப்படியே ஸ்க்ரீனுக்கு கொண்டு வந்திருக்கோம். சீக்கிரமா இந்தப் படம் பத்தி எல்லாரும் பேசப்போறாங்க, பாருங்க.”
“டைட்டிலே ‘உயிரே உயிரே’ன்னு செம ரொமாண்டிக்கா இருக்கு. என்ன கதை?”
“தெலுங்கில் ‘இஷ்க்’ என்ற பெயரில் வெளியாகி, பிரமாதமா ஓடின காதல் படம். காதல் என்பது மகிழ்ச்சியான நிகழ்வு. அது துன்பத்தை தரவே கூடாது. காதலிக்கும்போது சம்பந்தப்பட்ட இருவருமே தங்களது ஒவ்வொரு நொடியையும் மற்றவரிடம் பகிர்வார்கள். காதல் எவ்வளவு நாளைக்கு நீடிக்கிறதோ அவ்வளவு நாளும் தினமும் மகிழ்ச்சிப்பூ பூத்துக்கிட்டே இருக்கும். இதோட க்ளைமேக்ஸ் கல்யாணம்தான்.
கல்யாணம் மாதிரியான ஒரு சந்தோஷமான நாள், வேற எந்த நாளுமே கிடையாது. கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு இருக்கிற அதே மகிழ்ச்சி, கலந்துக்கிட்டு வாழ்த்துறவங்களுக்கும் இருக்கும். இப்படிப்பட்ட அற்புதமான நாளை, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிற காதலர்கள் மிஸ் பண்ணுறாங்க. வீட்டுக்கு தெரியாமல் பண்ணிக்கிற கல்யாணங்களில் த்ரில் நிச்சயமா இருக்கும்.
ஆனா பின்னாளில் யோசித்து மகிழ திருப்தி இருக்காது. கஷ்டப்பட்டு ஒரு சூப்பர் ஃபிகரை எப்படியோ தலைகீழா தண்ணி குடிச்சி உஷார் பண்ணுற ஒரு பையனாலே, அந்த பொண்ணு வீட்டை ஏன் அப்படி கன்வின்ஸ் பண்ண முடியலைன்னு நமக்குள்ளே ஒரு கேள்வி இருக்கும் இல்லையா? அந்த கேள்விக்கான விடையை பாசிட்டிவ்வா அனலைஸ் பண்ணியிருக்கிற படம் இது. கதையை கேட்காதீங்க. படம் வர்றப்போ பாருங்க. மூச்சுவாங்க நான் ஏன் இவ்வளவு விளக்கமா உரையாற்றுகிறேங்கிறதுக்கு அர்த்தம் புரியும்.”
“உங்க ஹீரோ சித்து எப்படி?”
“ஹீரோயின் ஹன்சிகா ரொம்ப சீனியர் ஆச்சே, பயந்துடப் போறாருன்னு முதல் நாள் ரொம்ப ஈஸியான டயலாக் கொடுத்தேன். ‘ஐ லவ் யூ’ அவ்ளோதான். ஆனாலும் எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தாலும் இந்த டயலாக்கை சொல்றப்போ கொஞ்சம் திணறத்தான் செய்வாங்க. சித்து அசால்ட்டா ஒரே டேக்கில் அசத்தினாரு. ஹீரோயினோடு ஹீரோவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. இது ஸ்க்ரீனில் நல்லா தெரியும்.”
“ஹன்சிகா?”
“ஆடியோ விழாவில் ஹன்சிகா அழகா, இந்த படத்தோட தெலுங்கு வெர்ஷனில் நடிச்ச நித்யாமேனன் அழகான்னு பட்டிமன்றமே நடந்தது. நான் இயக்குற படத்தில் ஹன்சிகா நடிக்கிறார், அதனால் அவர்தான் அழகின்னு நான் தீர்ப்பு கொடுத்தேன். சத்யம் எடுத்தப்போ கேட்டிருந்தா, நயன்தாராதான் எல்லாரையும் விட அழகுன்னு சொல்லியிருப்பேன் (சிரிக்கிறார்).
இந்தப் படத்துலே ஹீரோ தவுசண்ட்வாலா வெடின்னா, ஹீரோயின் டென் தவுசண்ட்வாலா வெடி. ப்ரியா என்கிற பாத்திரத்துக்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கிறார். சித்துவுக்கு இவர் கொடுக்குற கவுண்டர் டயலாக்ஸுக்கு தியேட்டர் அதிரப்போகுது.”
“விவேகாவோட ஒரு பாட்டு இப்பவே இளசுகள் வாய்க்கு அவல் ஆகியிருக்கே?”
“ஒரு கல்யாணம். புடவையில் முதல் தடவை ஹன்சிகாவை பார்க்குற ஹீரோ மயங்கணும். இதுதான் சிச்சுவேஷன். முதலில் விவேகா எழுதிக் கொடுத்த பாடல் எனக்கு அவ்வளவு திருப்தியா இல்லை. ஏன்னா, அவர் தெலுங்கில் நடித்த நித்யாமேனனை மனசில் வெச்சி எழுதினார். ‘இது தமிழு, இங்க ஹன்சிகா’ என்றதும் குஷியாகி மறுபடியும் பேனா மூடியைத் திறந்தார்.
‘தேவதை பார்க்கிறாள்
உயிரையே கேட்கிறாள்
இதுவரை பார்த்ததில்
இவள்தான் அழகி
உலகத்தின் மலர்களுக்கே
இவள்தான் தலைவி
வெண்ணையில் செய்த
பொம்மை போல தேகமா?’
என்று அவர், தமிழை உருக்கி எழுத, பாடலைப் பாடி முடித்த ஹரிஹரன் ‘பம்பாய்’ படத்தின் ‘உயிரே உயிரே’ மாதிரி ஹிட் ஆகும் என்று நம்பிக்கை கொடுத்தார். அதற்கேற்ப இப்போ செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.
இந்தப் பாடலைப் படமாக்கும்போது, ஹன்சிகாவின் கண் மையை எடுத்து நெற்றியில் சித்து வைக்கணும் என்பது மாதிரி ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் ஷூட் பண்ணுறப்போ நெற்றியிலிருந்து இடுப்புக்கு லொகேஷன் மாறிடிச்சி. இதை படமா பார்க்குறப்போ தியேட்டருலே செம ரகளை நிச்சயம்.”