போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார். அதன்பின்னர் அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.
தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.
பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.
ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.
இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஆக்ஷன், நடனம், மாஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்திற்கு பிறகு கோவை சரளா – தேவதர்ஷினி கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறது. கோவை சரளா தனது பாதி ஆங்கிலம் கலந்த பேச்சால் அனைவரையும் கவர்கிறார். அதேபோல் கணவன், மனைவியாக வரும் ஸ்ரீமன் – தேவதர்ஷினி கூட்டணியின் வழக்கமான காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் லாரன்சை காதலிப்பது மட்டுமே வேலை. கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார். சாய் தீனா, கபீர் துஹான் சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.
திரைக்கதையின் வேகத்திற்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் சென்டிமெண்ட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் `காஞ்சனா 3´ கலகல பேய் கதை.