கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின்போது அவரது செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
காயத்ரி ரகுராம் மீது சர்ச்சைகள் வரும்போது எல்லாம் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் கட்சியில் இல்லை என்று விமர்சித்தார். பதிலுக்கு காயத்ரியும் தமிழிசையை விமர்சித்தார். இதுவும் சர்ச்சையானது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காயத்ரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.
நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவை பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து.
சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்க பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன். அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே.
நான் இப்போதைக்கு வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள சிறிது இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை தொடர்ந்து காயத்ரி பா.ஜனதாவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவற்றை மறுத்து இருக்கிறார்.
இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில் ‘நான் அரசியலில் சிறிது இடைவெளி எடுக்க இருப்பதாகத் தான் தெரிவித்துள்ளேன். நான் குறிப்பிட்டது பா.ஜனதா கட்சியை அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.