முழுக்க முழுக்க அரசியல் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் தமிழக முதல்வராக இருக்கும் சச்சின் கெடேகரின் திடீர் மறைவால், முதல்வர் பதவிக்கான போட்டியில் 5 பேர் இணைகின்றனர்.
சச்சின் கெடேகரின் மகன் டோவினோ தாமஸ், மகள் மஞ்சு வாரியர், அவரது கணவர் விவேக் ஓபராய் மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாய் குமார் மற்றும் கட்சியில் சத்தமில்லாமல் பலம் வாய்ந்தவராக இருக்கும் மோகன் லால் உள்ளிட்டோரிடையே போட்டி நிலவுகிறது.
இதில் டோவினோ தாமஸ் பெயரை முதல்வர் பதவிக்காக பரிந்துரைக்க, அதில் சூழ்ச்சி வரும் சூழ்ச்சிகளை மோகன் லால் தடுத்து நல்ல தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறார். மோகன் லாலின் வலது கையாக அவர் சொல்வதை செய்து வருகிறார் பிரித்விராஜ்.
கடைசியில், முதல்வர் பதவியில் உட்கார்ந்தது யார்? சூழ்ச்சிகளை மோகன் லால் எப்படி எதிர்கொண்டார்? என்பதே லூசிபர் படத்தின் மீதிப்பாதி.
படம் முழுக்க பெரும்பாலும் வெள்ளை வேஸ்டி, சட்டையுடனேயே வலம் வருகிறார் மோகன் லால். பதுங்கியிருப்பதும், பிரச்சனை வரும் போது பாய்வதும் என மாஸ் காட்டிச் சென்றிருக்கிறார். மோகன் லால் சொல்வதை செய்யும் விசுவாசியாக பிருத்விராஜ் ஆக்ஷன் அவதாரம் எடுத்து கலக்கியிருக்கிறார். டோவினோ தாமஸ் அமைதியான வில்லனாகவும், விவேக் ஓபராய் மாஸான வில்லனாகவும் வந்து கவர்கின்றனர். மஞ்சு வாரியர் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றபடி, பத்திரிகையாளராக இந்திரஜித் சுகுமாரனும், சாய்குமார், நந்து, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் அரசியல்வாதியாகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
முரளி கோபி எழுதிய கதையை மாஸாக இயக்கியிருக்கிறார் பிரித்விராஜ். மோகன் லாலை ரசித்து ரசித்து மாஸாக காட்டியிருப்பது போன்று தோன்றுகிறது. மாஸ் காட்சிகளை தேவையில்லாமல் மிகைப்படுத்தாமல், தேவையான இடங்களில் மட்டும் காட்டியிருப்பது சிறப்பு. வழக்கமான ஒரு பழிவாங்கல் கதை தான் என்றாலும் அதை வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
தீபக் தேவின் இசையும், சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு பலம் கூட்டியிருக்கின்றன.
மொத்தத்தில் `லூசிபர்´ மாஸ்.