‘களவாணி-2’ பட இயக்குனர் சற்குணம், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘களவாணி-2’ படத்தை நானே தயாரித்து இயக்கி உள்ளேன். நடிகர் விமல் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். இம்மாதம் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தேன். அதுபோல விளம்பரமும் செய்திருந்தேன்.
ஆனால் படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துவிட்டது. தற்போது அந்த தடையை ஐகோர்ட்டு விலக்கிவிட்டது. படத்தை வெளியிடலாம் என்றும் ஐகோர்ட்டு கூறிவிட்டது. இந்த நிலையில் ‘களவாணி-2’ படத்தை எப்படி நீ வெளியிடுகிறாய், பார்ப்போம்? என்று என்னை போனில் சிலர் மிரட்டுகிறார்கள். அடியாட்கள் நேரடியாக என்னிடம் அனுப்பி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு இயக்குனர் சற்குணம் கூறினார்.