இன்னும் சில மாதங்களுக்குள் ஆளில்லா விமானங்களைக் கொண்டு பொருட்கள் நுகர்வோருக்கு டெலிவரி செய்யப்படும் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.
லாஸ் வேகாசில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் தன்னுடைய சமீபத்திய புதிய முயற்சியாக இது அமையும் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.
இந்த ஆளில்லா விமானங்களால் 2.3 கிலோ எடை வரை உள்ள பொருட்களை 15 மைல் தூரம் வரை தூக்கிச் செல்ல முடியும் என நிறுவனத்தின் நிர்வாகி ஜெஃப் வில்கே கூறியுள்ளார்.
அவர் உலகில் முதலில் எங்கு எப்போது இது நடைமுறைபடுத்தப்படும் எனக் கூறவில்லை.
இதை அமெரிக்காவில் உபயோகப்படுத்த அமேசானுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் பிபிசியிடம் கூறியுள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அமேசான் ப்ரைம் ஏர்க்கு எம்கே27 விமானத்தை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இயக்க சிறப்பு பறக்கும் தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் அமேசான் ப்ரைம் ஏர் இந்த விமானத்தை பொருட்களை டெலிவரி செய்வதற்காக பயன்படுத்த திட்டமிடுகிறது. இந்த சான்றிதழ் ஓராண்டு வரை நீடிக்கும். மேலும் தேவையென்றால் இதை நீட்டிக்கவும் செய்யலாம்.
விளம்பரத்திற்காக ஆளில்லா விமானத்தில் டெலிவரி என அமேசான் பொய்யாக கூறி வருவதாக வெகுநாட்களாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் டிசம்பர் 2016 ல், அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜில் அமேசான் இதை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தி காட்டியது. அப்போது ஆளில்லா விமானம் பொருளை 13 நிமிடங்களில் டெலிவரி செய்தது. ரீ -மார்ஸ் எனப்படும் மெஷின் லேர்னிங், ரோபோடிக்ஸ் , ஆட்டோமெஷன் மற்றும் விண்வெளி சம்பந்தமான ஒரு கருத்தரங்கில் இந்த ஆளில்லா விமானம் அமேசான் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டது.
பொருட்கள் தவறுவதை குறைக்க இந்த விமானங்கள் தயார்செய்யப்பட்டுள்ளது என அமேசான் கூறியுள்ளது.
இதில் சில ஆளில்லா விமானங்கள் தன்னிச்சையாக செயல்படும். ஆனால் சிலவற்றுக்கு எதிர்பாராத சூழ்நிலைகளை சந்திக்க தெரியாது. அந்த நேரத்தில் அது தகவல் தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கும் என வில்கே கூறினார்.
இந்நிறுவனம் இந்த ஆளில்லா விமானத்தை செயல்படுத்தும் வீடியோ ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அது இசையுடன் இருப்பதால் இது ஒலியை ஏற்படுத்துமா மற்றும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தொழில்நுட்ப ஆலோசகர் கரோலினா மிலனேசி கூறியுள்ளார்.
இது சத்தத்தை குறைக்கும் விதமாக உருவாக்க பட்டிருப்பதாக வில்கே கூறியுள்ளார்.