விமானத்தில் அனைவரும் உறங்குவது வழக்கம்தானே? அதுபோலதான் அந்த பெண்ணும் உறங்கி இருக்கிறார். விமானம் தரை இறங்கிய பின்னும் அவர் எழவில்லை. அவரை யாரும் எழுப்பவும் இல்லை. விமானப் பணி ஊழியர்கள் உட்பட, விமானத்திலிருந்து அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர், விமானிகளும் சென்றுவிட்டனர்.
ஆனால், அப்போதும் இவர் எழவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் இவர் எழுந்து பார்த்த போது இவர் அதிர்ந்து போய்விட்டார்.
எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. கைபேசியிலும் போதுமான அளவுக்கு சார்ஜ் இல்லை. இப்படியான சூழலில் அவர் தன் தோழிக்கு அழைத்து தன் நிலையை சொல்லி இருக்கிறார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கைபேசியில் சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருக்கிறது. பின், அந்த பெண்ணின் தோழி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லி இருக்கிறார். இதற்கு மத்தியில் அந்த பெண், விமான காக்பிட்டுக்கு சென்று அங்கு இருந்த டார்ச்சை எடுத்து ஒளி ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனை வெளியே இருந்து பார்த்த ஊழியர் அந்த பெண்ணை மீட்டு இருக்கிறார். இந்த சம்பவமானது க்யூபக்கிலிருந்து, டொரண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி நடந்திருக்கிறது. அந்நிறுவனம் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.