உலகத்தின் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சுற்றுலா தலமாக மாற்றப் போவதாக உக்ரைனின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாலடிமியர் செலன்ஸ்கி புதனன்று செர்னோபிலை சுற்றுலா தளமாக மாற்ற கையெழுத்திட்டார்.
´´செர்னோபில் குறித்த எதிர்மறையான எண்ணத்தை மாற்ற நேரம் வந்துவிட்டது´´ என செலன்ஸ்கி கூறியுள்ளார்.
செர்னோபிலில் ஏப்ரல் 1986ல் அணு உலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஐரோப்பா முழுவதும் கதிர்வீச்சைப் பரப்பியது. ஐ.நாவின் கூற்றுபடி, 50,000 சதுர கிலோமீட்டர் நிலம் வீணாகியது.
இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் அதனுடைய பாதிப்பு இன்றுவரை அங்கு இருப்பதாக தெரிகிறது.
“மனிதன் ஏற்படுத்திய ஒரு பேரழிவுக்குப் பின் இந்த பிரபஞ்சத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த இடம் செர்னோபில்” என செலன்ஸ்கி கூறியுள்ளார்.
´´இந்த இடத்தை விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், வரலாற்றாலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவருக்கும் காட்ட வேண்டும்´´ என ஜனாதிபதி கூறியுள்ளார்.
கதிர்வீச்சு அதிகம் இருந்தாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே செர்னோபிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த புதிய ஆணை செர்னோபிலுக்கு நீர்வழி பயணம் செய்யவும் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் ஏற்படுத்துவதற்கும் திட்டம் வகுக்கும். அது மட்டுமல்லாமல் இங்கே புகைப்படம் எடுக்கும் தடை நீக்கப்படுகிறது.
´´பார்வையாளர்களுக்கு மின் நுழைவுச்சீட்டு தருவதால் அங்கே நடக்கும் ஊழலையும் தடுக்க உள்ளோம். ஒரு தடை செய்யப்பட்ட பகுதி எப்போதும் ஊழல் மிக்கதாக இருக்கும் .இதில் சுற்றுலா பயணிகளிமிருந்து அரசு அதிகாரிகள் வாங்கும் லஞ்சமும் அடங்கும். இது விரைவில் நிறுத்தப்படும்´´ என செலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஜனாதிபதி செலன்ஸ்கி விபத்து ஏற்பட்ட அணு உலையை மூடிவைக்க புதிய இரும்பு கூரையை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
அந்த கவசம் 1.7 பில்லியன் டாலர் செலவில், கதிர்வீச்சு மேலும் பரவாமல் தடுக்க தயாரிக்கப்பட்டு, 2016 இல் இங்கே கொண்டுவரப்பட்டது. இது 275 மீட்டர் அகலமும் 108 மீட்டர் உயரமும் கொண்டது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. இதுவரை 5000 பேருக்கு தைராய்டு கேன்சர் வந்து அதற்கு சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டுள்ளது.
வேறு விதமான புற்றுநோய்களுக்கான சாத்தியம் இருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர் ஆனால் அவற்றுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் வேறு சில உடற் பிரச்சனைகள் மற்றும் பிறக்கும் போது ஏற்படும் குறைகள் என பலவற்றிற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை இருந்தாலும் இவற்றிற்கு இந்த கதிர்வீச்சுதான் காரணமா என்பது குறித்து யாரும் தெளிவாக இல்லை.
செனோபில் குறித்து ஒரு தொடர் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.