சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முன்னாள் கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இனவெறி தொடர்பான வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முன்னாள் கணவர், இது தொடர்பாக புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் 5 ஆண்டுகளுக்கு முன்பு, தன் கணவனை விவாகரத்து செய்ததும், தற்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால், திட்டி மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது.
இவ்வழக்கை விசாரித்த ஜெட்டா குற்றவியல் நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு 3 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
உலகில் உள்ள மற்ற முஸ்லிம் நாடுகளை ஒப்பிடுகையில், சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் என்பது மிகவும் குறைவு. வாகனம் ஓட்டவும், விளையாட்டு மைதானங்களுக்கு சென்று போட்டிகளை காணவும் சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.