மின்னணு விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக, இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மொத்தமாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடைபெற்ற இந்த போட்டியின் தனிநபர் பிரிவில் வெற்றிபெற்ற 16 வயதான கைல் கியர்ஸ்டோர்ஃப் எனும் சிறுவனுக்குதான் அதிகபட்ச பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த லண்டனை சேர்ந்த 15 வயதான ஜாடென் அஷ்மான் எனும் சிறுவனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் தனிநபர் பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன், கைல் முகம் நிறைய சிரிப்புடன், தலையை அசைத்தவாறே கூட்டத்தினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கைல், “நான் வென்றுள்ள பரிசுத்தொகையின் பெரும் பகுதியை சேமிக்க விரும்புகிறேன். பிறகு, எனது கிண்ணத்தை வைப்பதற்கு ஒரு மேசையை வாங்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
போட்டியின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் தனது சக போட்டியாளர்களை சிறிதும் தடுமாறாமல் சிரிப்பை வெளிப்படுத்தியவாறே கைல் தோற்கடித்ததை அனைவரும் ஆச்சர்யத்துடன் உற்றுநோக்கினர்.
இணையதளத்தை அடிப்படையாக கொண்ட விளையாட்டுத் துறையின் மதிப்பு இந்தாண்டு ஒரு பில்லியன் டாலர்கள் எனும் இமாலய அளவை தொடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
ஆனால், இந்த மிகப் பெரிய பரிசுத்தொகையை தோற்கடிக்கும் மற்றொரு போட்டிக்கான தேதி ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டது. ஆம், வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள ´தி போர்நைட்´ போட்டியில் சுமார் 100 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கு முன்னதாக, பத்து வாரங்களாக இணையதளத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் உலகம் முழுவதும் இருந்து சுமார் நான்கு கோடி பேர் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டை பொறுத்தவரை, இணையத்தில் வரைகலை மூலம் உருவாக்கப்படும் 100 வீரர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்படுவார்கள். பின்பு, அங்கு கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் கட்டமைப்புகளை பயன்படுத்தி சண்டையிட்டு மற்றவர்களை வீழ்த்த வேண்டும். கடைசிவரை தாக்குப்பிடிக்கும் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இலவசமாக திறன்பேசிகளில் கிடைக்கும் இந்த விளையாட்டை இதுவரை 20 கோடி பேர் முறையாக பதிவு செய்து விளையாடியுள்ளனர்.
ஒருபுறம் மிகப் பெரிய பரிசுத்தொகையை வழங்கி ஆச்சர்யமளிக்கும் இதுபோன்ற விளையாட்டுகள் சர்ச்சையில் சிக்காமல் இருப்பதில்லை. அதாவது, இதுபோன்ற இணையம் சார்ந்த விளையாட்டுகளில் விளையாடுவோரின் வயது சரிவர கண்காணிக்கப்படுவதில்லை என்றும், இதன் மூலம் இளம் வயதினர் திறன்பேசிகளுக்கு அடிமையாவதாகவும் உலகம் முழுவதும் எதிர்ப்பு அலைகளும் எழுந்துக்கொண்டு தான் இருக்கின்றன.