காதல் என்ற புனிதமான வார்த்தையை பயன்படுத்தி பலர் ஒரு பெண்ணை நெருங்கினால் அவள் நிலை என்ன என்பதை கதையாக்கி இருக்கிறார்கள். பெண்களை வெறும் போதைப் பொருளாக நினைப்பவர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர் சாந்தினி.
இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுக்கும் தொழில் அதிபருடன் மோதும் இவருக்கு பல சிக்கல்கள் வருகின்றன. இதனால் கோபம் அடைந்த பிரவீன்குமார் பல்வேறு வழிகளில் சாந்தினியை பழி வாங்கத் துடிக்கிறார். துணிச்சலுடன் போராடும் அவரை முறைமாமன் உள்பட பலர் விரும்புகிறார்கள்.
ஆனால், அவளுடைய உண்மையான காதலன் யார் என்பதை வித்தியாசமாக இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெகதீஷ் மாறுபட்ட நடிப்பை காட்டுகிறார். உண்மை வெளிப்படும்போது பிரமாதம் என்று சொல்ல வைக்கிறார். கவுதம் கிருஷ்ணா அமைதியாக வந்து அசத்துகிறார். பிரவீன்குமார் வில்லத்தனத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கவுன்சிலராக வரும் கணேசும் கிடைத்த வாய்ப்பை தவற விடவில்லை. சரவண சுப்பையா போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டுகிறார்.
சாந்தினி துணிச்சலான பெண்ணாக படம் முழுவதும் வந்து பெயரை தட்டிச் செல்கிறார். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதை பாராட்டலாம். பல படங்களில் குத்தாட்டம் போட்ட நிஷா முழுமையாக உடை அணிந்து நடிப்பில் நளினத்தை காட்டி இருக்கிறார். ஹேமாவுக்கு சிறிய வேடம் என்றாலும் நினைவில் நிற்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஜி.கிருஷ்ணன். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அதை சமாளிப்பது எப்படி? என்பதை திரைக்கதையாக அமைத்து பெண்களுக்கு துணிச்சலை ஊட்டி இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் தெளிவாக கதை ஓட்டத்தை அமைத்து இருந்தால் மாலையின் மணம் அதிகரித்து இருக்கும். மாயன் கேமரா மனதை கவர்கிறது. சாய்குருநாத் இசையில் பாடல்களை ரசிக்கலாம். குரங்கு கையில் கிடைத்த பூமாலையை கிளைமாக்ஸ் காப்பாற்றி இருக்கிறது.
மொத்தத்தில் ‘குரங்கு கைல பூமாலை’ கசங்கவில்லை