மிகப்பெரிய செல்வந்தர் ஜகபதி பாபு. இவருடைய ஒரே மகன் மகேஷ் பாபு. இவர் பணக்காரன் என்ற அந்தஸ்து இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்து வருகிறார். ஏழை மக்களுக்கு பல உதவி செய்யும் குணம் உள்ளவர்.
மகேஷ் பாபு ஒருநாள் சுருதிஹாசனை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். மேலும் சுருதிஹாசன் விவசாயம் சம்மந்தப்பட்ட படிப்பு படித்து வருவதால் அந்த படிப்பு படிக்க ஆர்வம் கொண்டு அதே கல்லூரியில் மகேஷ்பாபு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரே கல்லூரியில் படிப்பதால் மகேஷ்பாபுவை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இதனால் மகேஷ் பாபு மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் மகேஷ்பாபு மிகவும் செல்வந்தரின் மகன் என்று தெரிந்தவுடன், மகேஷ்பாபுவை ஒதுக்க நினைக்கிறார் சுருதிஹாசன்.
பின்னர், மகேஷ்பாபுவிடம் மிகவும் பணக்காரராக இருக்கும் உங்களின் சொந்த ஊர் தெரியுமா? அந்த ஊர் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியுமா? என்று கேட்க, மகேஷ் பாபு சொந்த ஊருக்கு செல்கிறார்.
சொந்த ஊருக்கு செல்லும் மகேஷ்பாபு, அந்த ஊர் அழியும் நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைக்கிறார். பின்னர், அந்த ஊரை தத்தெடுத்து ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவ்வாறு உதவிகள் செய்வதால் மகேஷ் பாபுவுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. இதிலிருந்து அவர் மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ்பாபு, அவருக்கே உண்டான பாணியில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சுருதிஹாசன், வழக்கமாக நாயகிகள் வருவதுபோல் வந்து சென்றிருக்கிறார். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவருடைய ஒளிப்பதிவு மகேஷ்பாபுவை கோடீஸ்வரனுக்கான அந்தஸ்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாடல் காட்சிகளையும் அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.
கொரட்டாலா சிவா தனது முந்தைய படங்களைப்போன்று இப்படத்தையும் கிராமத்து பின்னணியில் இயக்கியிருக்கிறார். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. சுவாரஸ்யமான காட்சிகளை அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். காட்சிகளை நீண்டநேரம் இழுப்பது போல் தோன்றுகிறது.
மொத்தத்தில் ‘செல்வந்தன்’ வளம் குறைவு.