நடனக்கலைஞர், நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் ஆகியனவற்றைத் தொடர்ந்து, இப்போது தயாரிப்பாளர் என புது அவதாரம் எடுத்துள்ளார் பிரபு தேவா. முதற்கட்டமாக மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளார் பிரபு தேவா. தயாரிப்பாளராக அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்திருக்கும் பிரபுதேவாவிடம் சில கேள்விகள்,
பாலிவுட் இயக்குநராக உங்கள் வாழ்க்கை வடிவமைக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறதா?
எதையுமே நான் திட்டமிடவில்லை. நடிப்பு, நடனம், இயக்கம் என எல்லாம் அதுவாகவே நடக்கிறது. தெலுங்கில் முதல் படத்தை இயக்கினேன். பின் போனி கபூர் சாரை நன்கு எனக்கு தெரியும் அவர் தயாரிக்க முன்வந்த காரணம் ‘வாண்டட்’ படத்தை முதல் படமாக இயக்கினேன். பல இந்தி படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தேன். பின்னர் பல நடிப்பு, இயக்கம் என என்னை நான் வளர்த்துக்கொண்டேன். பல வருடமாக இந்த சினிமா தொழிலில் இருக்கிறேன். இங்கே நமக்கான வாழ்வை அமைத்து வளர்வது மிகக் கடினம்.
நீங்கள் மசாலாப் படங்களை மட்டுமே பாலிவுட்டில் கொடுப்பதாகவும், அதற்கு மட்டுமே நீங்கள் பொறுப்பானவர் என்ற விமர்சனம் உள்ளதே?
பாட்டு, நடனம், காமெடி, ரொமான்ஸ், இதெல்லாம் நம் இந்திய சினிமாவில் எப்பொழுதும் இருப்பவை. அதை நான் எப்படி வேண்டாம் என நிராகரிக்க முடியும்.
உங்கள் படங்கள் அனைத்துமே நீங்கள் விரும்பிப் பார்த்த படங்களின் வெளிப்பாடுதானா?
ஆம். எனக்கு சினிமா பார்க்க மிகவும் பிடிக்கும். தி லார்ட் ஆஃப் தி ரிங், தி அவெஞ்சர்ஸ், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், மிஷன் இம்பாஸிபிள், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என இந்த உலகை காப்பாற்றும் ஹீரோக்களின் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதே என் வேலை. பெரிய திரை என்றுதானே சொல்கிறோம். வாழ்க்கையை விட பெரிய விஷயங்கள் சினிமாவில் தானே நடக்கும். மேலும் எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற நடிகர்களைப் பார்த்துத் தான் என்னை நான் வளார்த்துக் கொண்டேன். இவர்களுடைய படங்களை பார்க்கையில் கண்டிப்பாக நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எனக்கு எண்டர்டெயிண்ட்மெண்ட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
பலரும் பிரபுதேவாவால் ஒரே விதமான படங்களை மட்டுமே கொடுக்க இயலும் என கூறுகிறார்களே?
எனக்கு இது மகிழ்ச்சியே என்னால் எதுவோ ஒன்று செய்ய முடியும் என சொல்கிறார்களே. நல்ல விஷயங்களைச் சொல்லும் போது ஏற்றுகொள்ளும் நான் அதே போல் எனது தவறுகளை சொல்லும் போதும் கண்டிப்பாக நான் ஏற்றுக்கொள்வேன். நான் நடனம் ஆடும் போது இவருக்கு நடனம் மட்டுமே தெரியும் என கூறியவர்கள் நடிக்க ஆரம்பித்தவுடன் பரவாயில்லையே ,எனவும் இயக்கத்தில் இறங்கியவுடன் இன்னும் கொஞ்சம் பாராட்டுகளும் கிடைத்தது. ஆனால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என போட்டிக்காக நான் இவைகளை செய்யவில்லை.
ஒரு ஹாரரோ திகில் படமோ இயக்க வேண்டும் என நினைத்ததில்லையா?
முதலில் நான் தயாரிப்பாளரை நினைத்து பார்ப்பவன், நான் ஹாரர் படம் எடுக்க வேண்டும் என நினைத்தால் அதற்காக தயாரிப்பாளர்களின் பணத்தை வைத்து நான் சோதனை செய்ய முடியாது. நான் எவ்வளவு திறமைசாலி எனக் காட்டுவதற்காக நான் எப்போதும் எதுவும் செய்ய மாட்டேன்.
பல வெற்றிகளுக்குப் பிறகு ஆக்ஷன் ஜாக்ஸன் படம் தோல்வியைக் கடினமாக உணர்கிறீர்களா?
இது முதல் தோல்வியல்ல, மனிதனாகப் பிறந்த எல்லோரும் ஏதோ ஒன்றை மிகவும் விருப்பமாக செய்யும் போது அது நல்ல முடிவைத் தரவில்லை எனில் அது கஷ்டத்தைத்தானே தரும். எனக்கும் அப்படித்தான்.
ஆக்ஷன் ஜாக்ஸன் தோல்வி உங்கள் மீதான கருத்துகளை கொஞ்சம் மாற்றிவிட்டதை கவனித்தீர்களா?
ஆம், கவனித்தேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனினும் 100 வருட சினிமா வாழ்வில் இது இப்படித்தானே இருக்கிறது. இதை நான் சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இன்னும் அவர்கள் என்ன விமர்சனங்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன்.
எப்படி நீங்கள் நடிப்பு, நடனம், இயக்கம் என அனைத்தையும் சமாளிக்கிறீர்கள்?
ஒரு நாளில் காலை 7 மணி துவங்கி இரவு 12 மணிவரை வேலை செய்கிறேன். அவற்றில் எல்லா வேலைகளுக்கும் நேரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இப்படிச் செய்வதால் சமாளிக்க முடிகிறது.
இப்போது தயாரிப்பாளரும் ஆகிவீட்டீர்களே,
ஆமாம் சென்னையில் தான் ஆரம்பம். ஆனால் பயமாக இருக்கிறது. ஏனெனில் தயாரிப்பு அவ்வளவு சுலபம் அல்ல. ஒரு படம் பிரியதர்ஷன் சாருடன், மற்றொன்று ஜெயம் ரவியுடன், மூன்றாவது படம் ஒரு புதுமுக இயக்குநர் இயக்குகிறார். நானும் என் இயக்கத்தில் ஒரு படம் எடுப்பேன் ஆனால் இப்போது இல்லை.
பார்ட்டிகளில் நீங்கள் தென்படுவதே இல்லையே?
எனக்கு படப்பிடிப்பு, சினிமா தளம் என்பது வசதியாக உணர்கிறேன். ஆனால் பார்ட்டிகள் , நிகழ்ச்சிகள் என்பது இன்னும் எனக்கு பழக்கமாகவில்லை. நான் பார்ட்டி கொண்டாட்டத்தில் அதிகம் இருக்கும் நபரும் இல்லை. ஆனால் நண்பர்கள் நிகழ்ச்சிகள் என்றால் தவறாது கலந்துகொள்வேன்.
உங்களிடம் நீங்களே அதிகம் விரும்புவது?
நடிப்பு அவ்வளவு சுலபமல்ல. எனினும் நடனம், இயக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் இப்போது என்ன நிலைக்கு உயர்ந்துள்ளேனோ அதற்கு முதல் காரணம் நடனம் தான். அதே சமயம் இயக்கம் மிகவும் பிடிக்கும். அதீத பொறுப்பு, டென்ஷன், இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக டென்ஷனுடன் வேலை செய்வது என்றால் மிகவும் இஷ்டம்.
உங்கள் குழந்தைகள் சென்னையில் இருக்கிறார்களே, அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அவர்களை அதிகமாக மிஸ் பண்ணுகிறேன். எவ்வளவு நேரம் அவர்களுக்காக ஒதுக்கினாலும் அது பத்தாது. ஆனால் அவர்களுக்கு அப்பா இப்படித்தான் என பழகிவிட்டது. அதனால் கண்டிப்பாக என்னை குறை சொல்ல மாட்டார்கள்.
அவர்களும் சினிமாவை விரும்புகிறார்களா?
அது அவர்களுடைய விருப்பம். முதலில் அவர்கள் ஆரோக்கியமாகவும், நல்ல உள்ளத்துடன் இருந்தாலே அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ அப்படியே வருவார்கள்.