அமெரிக்காவின் கொலராடோவில், எவ்வித மருத்துவ உதவியும் இன்றி தன்னந்தனியே சிறைச்சாலையில் குழந்தையை பெற்றெடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பெண் கைதி ஒருவர் உள்ளூர் நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு, மாவட்ட சிறையில் “கழிப்பறையிலிருந்து சில அடி தூரத்தில் இருந்த, குளிர்ந்த கடினமான மேசையில்” தனது குழந்தையை பிரசவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக டயானா சான்செஸ் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.
தான் பிரசவிக்கும் சூழ்நிலையில் இருப்பதை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்து விட்டதாக அவர் கூறுகிறார்.
ஆனால், இதுகுறித்து பிபிசியிடம் பேசிய டென்வர் பகுதி பொலிஸார், இது தொடர்பாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டபோது, சிறைச்சாலை அதிகாரிகள் சரியான முறையில் செயலாற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், டென்வர் நகரம் மற்றும் மாவட்டம், டென்வர் சுகாதார மருத்துவ மையம் மற்றும் ஆறு நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. அவர்கள் “தங்களது சட்டரீதியிலான மற்றும் தார்மீக கடமையை பூர்த்தி செய்ய தவறிவிட்டனர்” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், அதாவது தனது 26ஆவது வயதில், அடையாள திருட்டு குற்றச்சாட்டின் கீழ் டயானா சான்செஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.