பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.
சாஹோ படத்தின் கதையில் எந்த புதுமையும் இல்லாததால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இருந்தாலும் படத்துக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக வசூலில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா வரும் பேபி வோன்ட் யூ டெல் மி’ பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் ஓவியத்தில் இருந்து காப்பியடித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்தி நடிகை லிசா ரே சாஹோ படக்குழுவை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அடுத்தவர்களின் படைப்பை இப்படித்தான் அப்பட்டமாக காப்பியடிப்பதா?’ என்று கேட்டு உள்ளதோடு ’இது அப்பட்டமான திருட்டு, இன்ஸ்பிரேஷன் என்று கூற முடியாது’ என்றும் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஓவியர் ஷிலோவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சாஹோ படக்குழு செய்த திருட்டை அம்பலப்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரூ.350 கோடி செலவு செய்த தயாரிப்பாளர் ஷிலோவின் அனுமதி பெற்று அவரின் படைப்பை பயன்படுத்தியிருக்கலாமே? என்று விமர்சித்துள்ளனர்.
முன்னதாக பிரபாஸ் வெளியிட்ட சாஹோ போஸ்டரில் அவரும், ஷ்ரத்தாவும் கொடுத்த போஸ் நடிகர் ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யா ராய் பச்சனும் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த போசில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு முன்பு வெளியான சாஹோ போஸ்டர்களை பார்த்தவர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக தெரிவித்ததோடு ஆதாரத்தையும் வெளியிட்டனர். சாஹோ படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இப்படி காப்பியடிப்பதா என்று சில பிரபலங்களும், சமூக வலைதளவாசிகளும் விளாசியுள்ளனர்.