தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இவருடைய டப்பிங் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மகேஷ் பாபு சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார்.
அவர் நடித்து கடைசியாக வெளிவந்த பாரத் எனே நேனு (பரத் என்னும் நான்) மற்றும் மஹரிஷி என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அடுத்து அவர் இயக்குநர் அணில் ரவிப்புடி இயக்கும் சரிலேறு நீகேவ்வாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்மி மேஜராக நடிக்கிறார். அவருடன் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
மகேஷ் பாபு சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும்போது, அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து வதந்திகள் எழுந்துள்ளன. நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்ற வதந்திகள் பரவுகின்றன. ஆனால், நடிகர் மகேஷ் பாபுவோ தனக்கு அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:- ’நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நான் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், அப்போது நான் செய்ததை, செய்வதை நான் மிகவும் விரும்பினேன். நிச்சயமாக, அந்த நாட்களில் என்னுடைய நோக்கங்கள் வேறுபட்டன.
பள்ளிக்கு செல்வதை நான் ஒரு வருடம் தவறவிட்டபோது, என்னுடைய அப்பா படிக்கச் சொன்னார். பின்னர் திரும்பி வந்து திரைப்படங்களில் நடிக்க சொன்னார். அதாவது, எனக்குத் தெரிந்த ஒரே விஷயம், நடிப்பு மட்டும் தான். நான் அதை மாற்ற விரும்பவில்லை’. இவ்வாறு அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.