வடமாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் கத்திஹார் பகுதியில் கங்கை நதிக்கரையின் ஓரத்தில் செயல்பட்டு வந்த ஒரு பள்ளி கட்டிடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் அதிகரித்ததால், அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் ஏற்கனவே வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கங்கை வெள்ளத்தில் பள்ளி கட்டிடம் அடித்துச்செல்லப்படும்போது, பலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ பதிவு சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.