நான் தி.மு.க.வை விட்டு வெளியேறியதற்கான காரணம் எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மட்டுமே தெரியும் அதை ஒரு போதும் நான்வெளியில் சொல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளாரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்த போதிருந்தே கருணாநிதி அணியின் பிரமுகராகவே பேசப்பட்டார். பின்னர் தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்ட போது அக்கட்சியில் சலசலப்புகள் அழகிரி அணியில் இருந்து வெளிப்பட்டது. ஆனால் நடிகை குஷ்புவோ பகிரங்கமாகவே ஸ்டாலினை எதிர்த்து பேட்டி அளித்தார்.
இதனால் கொந்தளித்துப் போன ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்பு மீது திருச்சியில் தாக்குதல் நடத்தினர். சென்னையில் உள்ள குஷ்பு வீடும் தாக்கப்பட்டது. இதன் பின்னர் தி.மு.க.வில் அவரின் செயல்பாடுகள் குறைந்தன… பின்னர் திடீரென குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகுவதாக கருணாநிதியிடம் ராஜினாமா கொடுத்தார். குஷ்பு தி.மு.க.வை விட்டு ஏன் விலகினார் என்ற விவகாரம் ஊடகங்களால் பல முறை யூகங்களாக எழுதப்பட்ட போதும், இதுதான் காரணம் என திட்டவட்டமாக திமுக தரப்பும் குஷ்பு தரப்பும் வெளிப்படுத்தவில்லை.
அதன் பின்னர் குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸில் ஐக்கியமானார். அக்கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் தி.மு.க.வில் இருந்து அவர் விலகியதற்கான ‘காரண’த்தை பல முறை செய்தியாளர்கள் கேட்ட போதும் தொடர்ந்து குஷ்பு அதை வெளிப்படுத்த மறுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போதும் இதுகுறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் குஷ்பு தாம் தி.மு.க.வில் இருந்து வெளியேறதற்கு காரணம் இருக்கிறது; அதை நான் வெளிப்படுத்த மாட்டேன்; எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் தெரிந்த அந்த விஷயத்தை 3வது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன்; என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.