புதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பாடசாலை அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பாடசாலையையே இடிக்கச் சொன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் வார இறுதி விடுமுறைக்குப் பிறகு திங்களன்று பாடசாலைக்கு வந்தபோது, பாடசாலையின் முதன்மை நுழைவாயில் முன்பு பூசை செய்யப்பட்டு, கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.
ஆசிரியர்கள் அளித்த தகவலின்பேரில் வந்த வருவாய் அதிகாரிகள் அவற்றை அகற்ற முற்பட்டபோது அதை சிலர் தடுத்ததாக புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில்தான் கோயில் கட்ட வேண்டும் என்று கடவுளே தங்களிடம் கேட்டுக்கொண்டதாக அந்தக் குழுவினர் கூறினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனைக்கு சாதிய பின்னணி இருப்பதாக அந்த நாளிதழ் விவரிக்கிறது.
அந்தக் கிராமத்தில் வசிக்கும் இரு வேறு சாதியினரின் ஒரு பிரிவினருக்கு தனியார் நிலத்தில் சொந்தமாகக் கோயில் உள்ளது. தனியாக கோயில் இல்லாத மற்றோரு பிரிவினர் அரசு பாடசாலை இருந்த இடத்தில் கோயில் கட்ட முற்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தலையீட்டுக்கு பிறகு பாடசாலையில் தாங்கள் நட்ட கற்களை அகற்ற அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.