விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்வதேச ரீதியில் இரண்டு இலங்கையர்கள் பிரபலமடைந்துள்ளனர்.
லொஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இலங்கையர்கள் இருவரும் சர்வதேச ரீதியில் பெரும்பாலானோரின் மனங்களை வென்ற போட்டியாளர்களாக திகழ்கின்றனர்.
இந்நிலையில், தர்ஷன் திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியேற்றப்பட்டமை, அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்தியது.
இலங்கையில் பிறந்த தமிழரான தர்ஷன், தற்போது பிரபல்யமடைந்த பின்னணியில் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமையானது, தனக்கு மிகுந்த கவலையளிப்பதாக கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் சிதம்பரம் ஹிரோஷினி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
மிகுந்த திறமைகளை கொண்ட தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற ஒருவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சிறந்த திறமைகளை கொண்ட ஒருவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதை தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
இலங்கையர் ஒருவர் இவ்வாறான நிகழ்ச்சிக்க சென்று, இவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தி, சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் சிதம்பரம் ஹிரோஷினி கூறினார்.
தர்ஷன் வெளியேற்றப்பட்டமை குறித்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவரின் நெருங்கிய நண்பரான மைந்தன் சிவாவை தொடர்புக் கொண்டு வினவினோம்.
´´விஜய்டிவியின் நிகழ்ச்சி நிரல் என்றாலும் கூட, இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் இதுவொரு அதிர்ச்சியான தருணம். பெரும்பாலும் அத்தனை பேரும் அழுதுகொண்டே நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். போட்டியில் வெல்லாவிட்டாலும் அனைவரின் மனதையும் வென்ற தர்ஷன் தான் உண்மையில் இந்த பிக்பாஸின் வெற்றியாளனாக கருத வேண்டி இருக்கிறது! போட்டி என்பதைத் தாண்டி மக்களின் நாயகனாகி அத்தனை மனங்களிலும் இடம்பிடித்துவிட்டான். இனி அவனது கனவின் பிரகாரம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்து பல படங்களில் நடிக்க நண்பர்களாக வாழ்த்துகிறோம்” என அவரின் நெருங்கிய நண்பரான மைந்தன் சிவா பிபிசி தமிழுக்கு கூறினார்.
இது தொடர்பில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் சந்துருவிடம் வினவினோம்.
இலங்கையை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எவருக்கும் தெரியாது எனவும், ஆனால் தற்போது சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
இதற்கு முழுமையான காரணம் விஜய் டி.வி என்பதனால், இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமை கவலையளிக்கும் விடயம் என்ற போதிலும், தர்ஷனை பிரபல்யமடைய செய்து சிறந்த நிலைமைக்கு கொண்டு சேர்ந்த விஜய் டி.விக்கு சந்துரு இதன்போது நன்றி தெரிவித்தார்.