புகைப்படம் என்றாலே நிச்சயமாக எல்லோருக்கும் மனதில் ஒருவித மகிழ்ச்சி தோன்றாமல் இருக்க முடியாது. ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷமான தருணங்கள், குறும்புத்தனமான சேட்டைகள் செய்த காட்சிகள், உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை எல்லாம் புகைப்படமாக எடுத்து, சில மாதங்களோ, ஆண்டுகளோ கடந்து அந்த புகைப்படங்களை எல்லாம் மீண்டும் ரசித்து நினைவுக்கூர்ந்தால் அதில் வரும் இன்பமே அலாதியானது.
இதனால்தானோ, என்னவோ? உலகில் உள்ள பெரும்பாலானோரின் கைகளை ஒரு சிறிய வகை கேமராவாவது தொட்டுக்கொண்டே இருக்கும்.
எந்தவொரு விஷயமானாலும் சரி அதை திரும்பத் திரும்ப செய்தால் கண்டிப்பாக சில சமயங்களில் அதைச் செய்பவர்களையே கடுப்பேற்றிவிடும். அதில் போட்டோ பிரியர்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என்பதற்கு சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு நிகழ்வையும் ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
சீன நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள குய்ஸோ பகுதியை சேர்ந்தவர் டியான் ஜுன் என்பவருக்கு கடந்த 1986-ம் ஆண்டு ஒரு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. தந்தையாகிவிட்ட சந்தோஷத்தில் பிறந்த குழந்தையுடன் அற்புதமாக ‘போஸ்’ கொடுத்து அழகிய புகைப்படத்தை எடுத்துக் கொண்டார், டியான் ஜுன்.
டியான் லீ என்ற பெயருடன் வளர்ந்த அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய பின், தனது மகன் பிறந்தபோது முதல் தடவை புகைப்படம் எடுத்து கொண்டது போலவே அன்றும் அதே போசுடன் போட்டோ எடுத்திருக்கிறார் அவனது தந்தை.
அன்று தொடங்கிய போட்டோ மீதான விருப்பமும், மகனின் சிறுவயது நினைவுகளை சேகரிக்கும் பழக்கமும், தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக அவரை தன் மகனுடன் அதே போசுடன் சற்றும் அசராமல் புகைப்படம் எடுத்து சேகரிக்க வைத்துள்ளது மிகுந்த அற்புதமான விஷயமாகும்.
இதில் கடைசியாக எடுத்த 29-வது படத்தில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், டியான் ஜுனின் பேரனும் இந்த வரிசையில் இணைந்து விட்டான் என்பதே.
இப்போது இந்த போட்டோக்களை எல்லாம் திரும்பி பார்த்தால், டியான் ஜுனின் குடும்பத்துடன் சேர்ந்து மற்றவர்களும் தனது வாழ்க்கையில் நடந்த இனிமையான சம்பவங்களை நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாது. இதை நாமும் முயன்றுப் பார்த்தால் என்ன..?