கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர் – நடிகைகள் தேர்வாகி உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார்.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.