மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (வயது 81). சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 27 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து ஆசிரியையின் மகன் கூறியதாவது: “என் தாய் தீவிர ராம பக்தர். அவர் கடந்த 1992 இல் பாபர் மசூதி இடித்த விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறைகளால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தார். அப்போது அவருக்கு 54 வயது. அதில் இருந்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்வரை பால், பழம் மட்டும்தான் சாப்பிடுவேன் வேறு உணவை சாப்பிட மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை, சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை கேட்ட என் அம்மா அளவில்லா ஆனந்தம் அடைந்தார். மேலும் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதுமாறு என்னிடம் கூறினார். என் அம்மாவின் வேண்டுதல் நிறைவேறியதால் விரைவில் ஒரு விழா நடத்தி அவரது விரதத்தை நிறைவுபெற செய்வோம்” இவ்வாறு அவருடைய மகன் கூறினார்.