அவுஸ்திரேலியால் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி வரும் 29 ஆம் திகதி அடிலெய்டில் பகல் – இரவு போட்டியாக நடக்கிறது. இந்நிலையில், ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த காரில் சென்றுள்ளனர்.
ஓட்டல் வந்தடைந்ததும் கார் டிரைவராக இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் கொடுத்தனர். அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த டிரைவரை விருந்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 5 வீரர்களுடன் இந்திய டிரைவர் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருந்த புகைப்படம் அவரது தொலைபேசியில் இருப்பதை காட்டினார்.
இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘நாங்கள் இரவு உணவு அருந்த விரும்பினோம். எங்களுக்கு ரெஸ்டாரன்ட் எங்கு இருக்கிறது என்பது தெரியாததால், பாகிஸ்தான் அல்லது இந்தியா ரெஸ்டாரன்டிற்கு செல்லுமாறு கூறினோம். டாக்சி டிரைவர் இந்திய ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றார்.
ரெஸ்டாரன்ட் வந்ததும் வாடகை பணத்தை கொடுத்தோம். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படி என்றால் எங்களுடன் உணவு அருந்த வாருங்கள் என்றோம். அவர் சம்மதம் தெரிவித்து எங்களுடன் வந்து உணவு அருந்தினார்’’ என்றார்.