தன்னை சிலர் ரஷ்ய விலைமாது என அழைத்ததாக நடிகை கல்கி கோச்லின் கூறியுள்ளார். கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் தீவானி உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் பிரெஞ்ச் நடிகை மற்றும் எழுத்தாளர் கல்கி கோச்லின். தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கல்கி. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கை ஹெல்ஸ்பர்க் என்பவரை கல்கி காதலித்து வருகிறார். இருவரும் லிவிங் டுகெதர் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றனர். கல்கி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் கல்கி கோச்லின் ஒரு ஆங்கில இணைய தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தனது கர்ப்பம், காஸ்டிங் கவுச், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஒருமுறை தன்னை தயாரிப்பாளர் ஒருவர் மறைமுகமாக படுக்கைக்கு அழைத்ததாக கல்கி தெரிவித்துள்ளார். அவருடன் டேட்டிங் செல்ல மறுத்ததால், தன்னை அவருடைய படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். ‘ஏ ஜவானி ஹாய் தீவானி’ பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தாலும், அதன் பிறகு தனக்கு ஒன்பது மாதங்கள் படவாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் கல்கி தெரிவித்துள்ளார்.
மேலும் தேவ் டி படம் வெளிவந்த சமயத்தில் பாலிவுட்டில் தன்னை சிலர் ரஷ்ய விபச்சாரி என அழைத்ததாக கல்கி கூறியுள்ளார். பாலிவுட் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகளை தான் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.