வடகொரியாவில் கிம் ஜாங் அன்னின் குடும்ப ஆட்சி நடக்கிறது. அண்டை நாடான தென் கொரியாவுக்கு மட்டுமல்லாது, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு இந்த நாடு பரம எதிரியாக திகழ்கிறது.
வடகொரியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளிலும் இப்போது ஒரே நேரம்தான் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக வடகொரியாவில் பகல் 12 மணி என்றால் தென்கொரியாவிலும், ஜப்பானிலும் இதே 12 மணிதான். ஆனால் இதில் மாற்றம் செய்து ‘பியாங்யாங் டைம்’ முறையை வடகொரியா கொண்டு வரப்போகிறது.
வருகிற 15-ந் திகதி முதல் இந்த நாட்டின் நேரம் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் ஒப்பிடுகையில் அரை மணி நேரம் பின்னோக்கி இருக்கும். அதற்கேற்ப கடிகாரங்கள் திருப்பி வைக்கப்படும். அதாவது ஜப்பான், தென்கொரியாவில் பகல் 12 மணி என்றால் இனி வடகொரியாவில் பகல் 11.30 மணியாக இருக்கும்.
வருகிற 15-ந் திகதி அன்று, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வி அடைந்ததின் 70-வது ஆண்டு நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாள்தான், ஜப்பானிடம் இருந்து, ஒருங்கிணைந்த கொரியாவின் விடுதலைக்கும் வழிவகுத்தது. ஜப்பானிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது நிர்ணயித்த நேர நிர்ணயம் கூடாது என்பதற்காகவே வடகொரியா நேரத்தை மாற்றி அமைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.