கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி எத்தியோப்பியா இளைஞர் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக செருப்புகளை சுத்தம் செய்து வருகிறார் . 27 வயதான செக்கோலே மென்பெருவுக்கு சிறு வயதில் பல கனவுகள் இருந்தன. வாழ்க்கையில் உச்சங்களைத் தொட வேண்டும் என நினைத்தவரை வறுமை பின்னுக்கு இழுத்தது. பள்ளிக்கே செல்ல முடியாத அளவுக்கு வறுமை.
ஆனால், வீட்டில் பிடிவாதம் பிடித்து பள்ளிக்கு சென்றார். கட்டணம் செலுத்துவதற்காகப் பகுதி நேரமாக செருப்புகளை சுத்தம் செய்யும் வேலைகளை செய்தார். “அந்த சமயங்களை இப்படியான வேலைகள் செய்து வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வந்த விளிம்பு நிலை மனிதர்களை நினைத்து கொள்வேன்,” என்கிறார்.
எத்தியோப்பியாவில் அதிக அளவில் பொறியாளர் தேவைபடுவார்கள் என பேச்சு நிலவியதால் 2013ஆம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கிறார். ஆனால், அவர் நினைத்து போல நடக்கவில்லை. படித்து முடித்தபின் அவர் கனவுகள் ஏதும் கைகூடவில்லை.
வேலைக்காக எத்தியோப்பியா எங்கும் முயன்று பார்த்த அவர், மீண்டும் செருப்புகளை சுத்தம் செய்யும் வேலைக்கே திரும்பிவிட்டார். புதிய வேலைவாய்ப்புகளை உண்டாக்காமல், வெற்று அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அதிகம் எத்தியோப்பியா அரசு கவனம் செலுத்துவதே இப்படியான நிலைக்குக் காரணம் என்கிறார் செக்கோலே.