கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்தியில் தயாரான ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் அக்ஷராஹாசன் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவர் இந்தியில் நடிக்கவே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்ஷராஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
“எனக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கருதுகிறேன். முதலில் இந்திபட உலகில் காலூன்ற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருக்கிறது. இங்கு சாதித்துவிட்டுதான் தமிழ், தெலுங்கு படங்களுக்கு வருவேன். எனது தந்தை கமல்ஹாசனும், தாய் சரிகாவும் திறமையான நடிகர்கள்.
வாழ்க்கையில் சொந்தமாக நான் முடிவுகள் எடுத்துக்கொள்ள அவர்கள் எனக்கு உரிமை அளித்துள்ளனர். ஒரு சிறந்த நடிகையாக என்னை உருவாக்கி வருகிறேன். இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறேன். இன்னும் எந்த படமும் முடிவாகவில்லை”.இவ்வாறு அக்ஷரா ஹாசன் கூறினார்.