ஒரு புதிரான வைரஸ் – அறிவியலில் முன்பு அறியப்படாத வைரஸ் – சீனாவில் வுஹான் நகரில் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது.
இந்த நோயால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஏழு பேர் நிலைமை இப்போது கவலைக்கிடமாக உள்ளது.
நோயாளிகளுக்கு நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய, புதியதொரு வைரஸ் இப்போது பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கவலையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. உலகெங்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
இது இன்று வந்துவிட்டு நாளை போய்விடும் வகையைச் சேர்ந்த வைரஸ் தாக்குதலா அல்லது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் நோயின் அறிகுறியா என்று கேள்வி எழுந்துள்ளது.
நோயாளிகளிடம் இருந்து வைரல் சாம்பிள் எடுத்து பரிசோதனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இது சுவாசக் குழாயைப் பாதிக்கும் வகையிலான கரோனா வைரஸ் எனப்படும் தொற்று என்று சீனாவில் உள்ள மற்றும் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
கரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. ஆனால் ஆறு (புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை சேர்த்தால் ஏழு) வைரஸ்கள் மட்டுமே மக்களைப் பாதிக்கக் கூடியவை.
2002ல் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய, சார்ஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறால் 8,098 பேர் பாதிக்கப்பட்டதில் 774 பேர் உயிரிழந்தனர்.
“சார்ஸ் பற்றி நன்கு நினைவு இருக்கிறது. அதனால் தான் பயம் அதிகமாக உள்ளது. ஆனால் அதுபோன்ற நோய்களை எதிர்கொள்ள நாம் மிக நன்றாகவே தயாராக இருக்கிறோம்” என்று வெல்கம் டிரஸ்ட்டை சேர்ந்த டாக்டர் ஜோசி கோல்டிங் கூறுகிறார்.
கரோனா வைரஸ்கள் லேசான சளியில் தொடங்கி மரணத்தை ஏற்படுத்துவது வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
இந்தப் புதிய வைரஸ், இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வகையைச் சேர்ந்ததாகத் தோன்றுகிறது.
“புதிய கரோனா வைரஸை பார்க்கும்போது, அறிகுறிகள் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதைக் காண நாங்கள் விரும்புகிறோம். இது சளி போன்றதைவிட தீவிரமான அறிகுறியாக இருக்கலாம், கவலை ஏற்படுத்துவதாக இருக்கலாம், ஆனால் சார்ஸ் போல அதி தீவிரமானதாக இல்லாமல் இருக்கலாம்” என்று எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் வுல்ஹவுஸ் கூறுகிறார்.
ஆறு கரோனா வைரஸ்கள் மக்களை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது.
புதிய வைரஸ்கள் எப்போதும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கவனிக்கப்படாமல் இருந்த ஒரு கிருமி தொகுப்பில் இருந்து அவை மனிதர்களுக்குப் பரவுகின்றன.
“கடந்த காலத்தில் தொற்றுநோய் பரவியதை நாம் பார்த்தால், அது கரோனா வைரஸாக இருந்தால், விலங்குகள் காப்பகப் பகுதியில் இருந்து தான் வந்திருக்கும்” என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நச்சுயிரியல் வல்லுநராக இருக்கும் பேராசிரியர் ஜொனாதன் பால் கூறுகிறார்.
சார்ஸ் கிருமி புனுகுப் பூனையிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது.
2012ல் உருவாகிய மெர்ஸ் நோயால் 2,494 பேர் பாதிக்கப்பட்டதில் 858 பேர் உயிரிழந்தனர். இது ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகங்களிடம் இருந்து பரவியது.
கிருமி உருவாகும் விலங்குகள் காப்பகம் எது என அடையாளம் கண்டுவிட்டால், அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது எளிதாகிவிடுகிறது.
இந்த நோயாளிகளுக்கு வுஹானில் உள்ள தெற்கு சீனா கடல் உணவு மொத்த விற்பனை அங்காடியுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கடலுக்குச் செல்பவர்கள் (துருவப் பகுதி திமிங்கலம் போன்ற) கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவது உண்டு. அங்காடியில் கோழி, வௌவால், முயல், பாம்பு போன்ற உயிரினங்களும் வைத்திருக்கிறார்கள். அவையும் வைரஸ்கள் உருவாக வாய்ப்பை ஏற்படுத்தும்.
மக்கள் தொகை நெருக்கத்தின் காரணமாகவும், இந்த வைரஸ் உள்ள பிராணிகளுடன் அதிக தொடர்பில் இருப்பதாலும் சீனாவில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்று பேராசிரியர் வுல்ஹவுஸ் கூறினார்.
“அடுத்த நோய்க் கிருமி சீனாவிலோ அல்லது அந்தப் பகுதியிலோ இருந்தால் யாரும் ஆச்சர்யப்படப் போவதில்லை” என்கிறார் அவர்.
ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியதாக இந்த வைரஸ் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
நுரையீரல்களை கிருமித் தொற்று தாக்கினால், இருமல், சளி போன்றவற்றாலும், அந்த நோயாளிக்கு அருகில் சென்றாலும் பாதிப்பு ஏற்படுவது கவலைக்குரிய பெரிய விஷயம்.
மனிதர்களுக்கு இடையில் இது பரவக் கூடியதாக இருந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது நெருங்கிச் செல்லும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருந்தபோதிலும், மனிதர்களுக்கு இடையில் இது பரவுமா என்பதை தீர்மானிக்க இந்த அவகாசம் போதுமானதல்ல என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
“குறுகிய காலத்திற்குள் விலங்குகளிடம் இருந்து மனிதர்கள் 59 பேருக்குத் தொற்றுகள் ஏற்படும், அது உள்மன உணர்வு ரீதியில் அதிகமானது. அதற்கான விடை இப்போது தெரியாது” என்கிறார் பேராசிரியர் பால்.
“சந்தேகத்தைவிட நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். இவ்வளவு சீக்கிரத்தில் அதைச் சொல்லிவிட முடியாது – பெரும்பாலான கரோனா வைரஸ்கள் உண்மையில் தொற்றக் கூடியவை என்பது தான் என் ஆரம்பகட்ட கவலையாக இருக்கிறது” எனஅறு பேராசிரியர் வுல்ஹவுஸ் கூறியுள்ளார்.
இதுவரை அவ்வளவு வேகம் இல்லை.
59 நோயாளிகளில் அனைவருக்கும் 2019 டிசம்பர் 12 முதல் 29 ஆம் தேதிக்குள் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
அதன்பிறகு புதிய நோயாளிகள் யாருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை.
“இந்தப் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது நல்ல விஷயம்” என்று டாக்ட் கோல்டிங் கூறுகிறார்.
“இதை முக்கியமான விஷயமாக சீனா எடுத்துக் கொண்டுள்ளது, இது கட்டுப்படுத்தப்படும், பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார் அவர்.
இருந்தபோதிலும், இந்த மாதத்தின் பிற்பகுதியில் சீனப் புத்தாண்டுக்காக பல லட்சம் பேர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்த வைரஸ் பரவக் கூடுமோ என்ற கவலையும் இருக்கிறது.
உடல் வெப்ப நிலையை பரிசோதிப்பதன் மூலம் இந்தப் பாதிப்பு உள்ளவர்களை அடையாளம் காண முடியும். கிருமி பரவும் ஆபத்தை தவிர்க்கும் நோக்கில், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தனி பகுதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டவர்களுக்கு அறிகுறி ஏதும் தென்படுகிறதா என்றும் கண்காணிக்கப் படுகிறது.
பயணிகளுக்கு பரிசோதனை செய்வதற்காக வெப்பநிலை பரிசோதனை போன்ற கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
சுத்தம் செய்து, கிருமி நீக்கம் செய்வதற்காக கடல் உணவு அங்காடி வளாகம் மூடப்பட்டுள்ளது.
“இப்போதைக்கு, நமக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரையில், நாம் எவ்வளவு அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதைச் சொல்வது உண்மையிலேயே கடினமானது” என்று டாக்டர் கோல்டிங் கூறுகிறார்.
“எங்கே தொடங்கியது என்பதை உறுதி செய்யாத வரையில், எங்களுக்கு அது எளிதானதாக இருக்கப் போவதில்லை” என்கிறார் அவர்.
“மனிதர்களை முதன்முறையாக எந்த வைரஸ் தாக்கினாலும் நாம் கவலைப்பட்டாக வேண்டியுள்ளது. ஏனெனில் முதலாவது தடையை நாம் தாண்டியாக வேண்டும்” என்று பேராசிரியர் பால் கூறுகிறார்.
“மனிதனின் உயிரணுவுக்குள் சென்று, பிரியத் தொடங்கிவிட்டால், வேகமாக, அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பிரியக் கூடியதாக அது மாறிவிடும்.”
“அந்த வாய்ப்பை வைரஸுக்கு நாம் கொடுத்துவிடக் கூடாது” என்கிறார் அவர்.