புகைப்பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் பிறழ்வுகளை சரிசெய்யும் ஒருவித ‘மந்திர’ திறன் நுரையீரலுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இதற்கு ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டியது அவசியம்.
நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பிறழ்வுகள், ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகுகூட தொடர கூடியது என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நேச்சர் எனும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையின்படி, நுரையீரலில் ஏற்படும் இந்த விரும்பத்தகாத மாற்றத்தின்போது, அதிலிருந்து தப்பிக்கும் ஒருசில செல்கள் பிறகு, பாதிக்கப்பட்ட நுரையீரலை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
ஒரு பாக்கெட் சிகரெட்டை சுமார் 40 ஆண்டுகளுக்கு புகைத்துவிட்டு, பிறகு அந்த பழக்கத்தை விடுத்தவர்களிடம் இந்த வியத்தகு மாற்றம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புகையிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் நுரையீரல் செல்களில் உள்ள டி.என்.ஏவை சிதைத்து மாற்றியமைக்கின்றன. இது நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது.