நடிகர் – மைக்கேல் சசிகுமார்
நடிகை – அமலா மரியா
இயக்குனர் – எஸ்.பி.ராஜ்பிரபு
இசை – ஜீவன் மயில்
ஓளிப்பதிவு – சமித் சந்துரு
மேல்சாதி குடும்பத்துப் பெண்ணுக்கும் கீழ்சாதி இளைஞனுக்கும் காதல் மலர்கிறது. சாதிவெறி பிடித்த பெண்ணின் அப்பா, குடும்ப கெளரவம் கெட்டுவிடும் என்பதைக் காரணமாகச் சொல்லி குடும்பத்தின் சம்மதத்தோடு தன் மகளைக் கொன்று விடுகிறார். காதலியைப் பறிகொடுத்த அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்படுகிறான். கதையில் இது ஒரு டிராக்.
ஊரில் பெரிய மனிதர் அவர். சாதியில் உயர்ந்தவர். அவரது தங்கையை கீழ்சாதி இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். பெண்ணுடைய அண்ணனின் சாதிவெறி இந்த காதலர்களை என்ன செய்தது என்பது கதையின் இன்னொரு டிராக். இரண்டு கதைக்குமான தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகர்கள் மைக்கேல் சசிகுமார், குணா ஆகியோர் நடிப்பில் வெளிப்படும் அப்பாவித்தனம், நாயகிகள் அமலா மரியா, கிருத்திகா நடிப்பில் வெளிப்படும் குழந்தைத்தனம் கதாபாத்திரத்துக்கு பலம். பெருத்த தேகம், முறுக்கு மீசை என கம்பீரமான தோற்றத்தில் வேலா கிருஷ்ணசாமி. புலிக்கொடி தேவனாக, சாதிவெறியில் ஊறிப்போனவராக தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. நாயகன் குணாவின் அண்ணனாக அருள் அன்பழகனும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்.
சாதிவெறியால் சின்னாபின்னமாகும் காதலை மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி. ராஜ்பிரபு. படத்தில் காமெடி காட்சிகளுக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஜீவன் மயில் இசையில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கள்ளி என் கள்ளி’ பாடல்கள் இனிமை. சமித் சந்துருவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘புலிக்கொடி தேவன்’ சாதியும்…. காதலும்.