மலையாள திரையுலகில் திருமண சீசன் தொடங்கி உள்ளது. நடிகை சரயூ மோகன் திருமணத்தை தொடர்ந்து நடிகை அசினுக்கு மும்பை தொழில் அதிபர் ராகுல் சர்மாவுடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதனை அசின் ஒப்புக்கொண்டார். அவரது திருமண செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை பானுவும் காதல் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியானது. இதனை இருவீட்டாரும் ஒப்புக்கொண்டு வருகிற 30–ந்தேதி பானு–ரிங்கு டோமி திருமணம் நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.
பானுவை தொடர்ந்து மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அர்ச்சனா கவியும் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுவும் காதல் திருமணம் தான். மலையாள திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த அபிஷ் மேத்யூதான் அர்ச்சனா கவியின் கணவராக போகிறார். இதனை அர்ச்சனா கவியே ஒப்புக்கொண்டுள்ளார்.
திருமணம் பற்றி அர்ச்சனா கவி கூறும்போது, அபிஷை குழந்தை பருவத்தில் இருந்தே தெரியும். அவரை திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே என்னிடம் கேட்டனர். அப்போது நான் மறுப்பு தெரிவித்தேன். இப்போது அதனை ஏற்றுக்கொண்டேன். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. அதனால்தான் நாங்கள் இதை வெளியில் சொல்லாமல் இருந்தோம். ஆனாலும் எப்படியோ தகவல் வெளியாகி விட்டது என்றார்.
அர்ச்சனா கவி மலையாளத்தில் ‘மம்மி அன்ட் மீ’, ‘பெஸ்ட் ஆப் லக்’ படங்களிலும் தமிழில் ‘அரவான்’, ‘ஞான கிறுக்கன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.