கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு வடக்கேகாடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் நாயர்.
இவரது மனைவி ராஜம்மாள் (வயது 87). இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள். பரமேஸ்வரன் நாயர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியின் பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்கள் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பகல் ராஜம்மாள் தனது வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரது வீட்டு கதவு சாத்தப்படாமல் இருந்தது.
அப்போது திடீரென்று வீட்டில் இருந்து ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறையவைப்பதாக இருந்தது.
ராஜம்மாளின் வீட்டிற்குள் புகுந்த தெரு நாய்கள் அவரை கடித்து குதறிக் கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் அந்த நாய்களை அடித்து விரட்டி விட்டு ராஜம்மாளை மீட்டனர். பிறகு அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ராஜம்மாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கேரளாவை பொருத்தவரை தெரு நாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பெரியவர்கள், குழந்தைகள் என்று பலரும் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்து உள்ளனர். ஏராளமானவர்கள் தினமும் நாய் கடி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருகிறார்கள். எனவே தெரு நாய்களை ஒழிக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.