தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் பாவின் (வயது30). இவர் பூனை ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்றார். அதனால் பூனையை விக்ராந்த் என்பவரிடம் பாவின் ஒப்படைத்து விட்டு அதன் பராமரிப்பு செலவுக்காக ரூ.500 கொடுத்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பாவின் ஊருக்கு வந்தார். உடனே அவர், விக்ராந்துக்கு போன் செய்து பூனையை கொண்டு வருமாறு கூறினார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. எனவே பாவின் கல்யாண், வாயாலே நகரில் உள்ள விக்ராந்தின் வீட்டுக்கு சென்றார். அப்போது விக்ராந்த், பூனை காணாமல் போய்விட்டதாக கூறினார்.
இதையடுத்து பாவின் பூனையை அருகில் உள்ள பகுதியில் தேடினார். அப்போது அங்கு உள்ள கட்டிடத்தின் பின்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் சாக்குப்பையில் அவரது பூனையை பிணமாக மீட்டார். இதையடுத்து அவர் விக்ராந்த் பூனையை கொன்றுவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.