முதல்வர் பதவியை ஏற்கப் போவதில்லை என தாம் கூறியதை மன்ற நிர்வாகிகள் ஏற்காததுதான் தமக்கு ஏமாற்றம் என ரஜினிகாந்த் குறிப்பிட்டதாக ஒரு தகவல் பரப்பிவிடப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் எந்த ஒரு பேட்டியையும் தெளிவாக அளிப்பது இல்லை. ஒவ்வொரு பேட்டியிலும் பூடகமாக எதையாவது ஒன்றை சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறார்.
இதன்பின்னர் இந்த நடுத்தெரு பிரஸ்மீட்தான் அத்தனை மீடியாவிலும் விவாதப் பொருளாகிவிடுகிறது. இதனைவைத்தே லைம் லைட்டில் தொடர்ந்து இருக்கலாம் என்பது கூட ரஜினிகாந்துக்கு யாரோ சொல்லிக் கொடுத்த ஐடியாவாகவும் இருக்கலாம்.
அதனால்தான் ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் ஒரு புதிர் பேச்சை இடம்பெற வைத்துவிடுகிறார். இதே பாணியைத்தான் சென்னையில் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த். மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போது ஒரு விஷயம் ஏமாற்றமாக இருந்தது என பொடி வைத்து பேசினார் ரஜினிகாந்த். அப்புறம் என்ன? அந்த ஏமாற்றம் என்ன? என்பது குறித்துதான் இப்போது ஹாட் டாபிக்..
இந்த ஆராய்ச்சியில் தற்போது பரவி வருவதுதான் முதல்வர் பதவி குறித்த ரஜினிகாந்த் கருத்து என்பது. அதாவது மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சிக்குதான் தாம் தலைவர்; ஆட்சிக்கு அதாவது முதல்வர் பதவிக்கு வேறு ஒருவர் என ரஜினிகாந்த் கூறினாராம். இதனை திட்டவட்டமாக மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்கவில்லையாம். இதனால்தான் ரஜினிகாந்த் ஏமாற்றம் அடைந்துவிட்டதாக கூறியதாக அவருக்கு பில்டப் கொடுக்கும் முகாம்கள் தகவல்களை பரப்பிவிடுகின்றன.
இன்னொரு பக்கம், ஏம்பா பாபா படத்தின் கதையை அப்படியே அடிச்சு விடுறீங்க என்கிற ஏகடிய குரலும் கேட்கிறது. முதல்ல கட்சி வரட்டுமே!