பிரபுதேவா இயக்கும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் வில்லன் நடிகரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை, ஹீரோயின் , மர்டர் 3, சுல்தான், பாஹி 2 உட்பட பல இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரன்தீப் ஹூடா.
இவர் இப்போது பிரபுதேவா இயக்கும் ராதே படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தமிழ் ஹீரோ, பரத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை நடிகர் சல்மான் கான் தயாரித்து நடிக்கிறார். சல்மான் கான்- பிரபுதேவா இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே வான்டட் படத்தில் சல்மான் கானை இயக்கி இருந்தார், பிரபுதேவா. இது தெலுங்கில் மகேஷ்பாபுவும் தமிழில் விஜய்யும் நடித்து ஹிட்டான போக்கிரி படத்தின் ரீமேக். இந்தப் படம் இந்தியில் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து, சல்மான் கானின் தபாங் 3 படத்தை இயக்கினார் பிரபுதேவா. இந்தப் படத்தில் வில்லனாக கன்னட ஹீரோ சுதீப் நடித்தார். மற்றும் சோனாக்ஷி சின்ஹா, சையி மஞ்சரேக்கர், அர்பாஸ் கான் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி வெளியானது. பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தப் படத்தை சல்மான் கான் தயாரித்திருந்தார். இதையடுத்து அடுத்தப் படமான ‘ராதே’வை இயக்கும் வாய்ப்பையும் பிரபுதேவாவுக்கு வழங்கினார், சல்மான் கான். இதில் திஷா படானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், ரன்தீப் ஹூடா, கவுதம் குலாடி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. அப்போது ஆக்ஷன் காட்சியின் போது, நடிகர் ரன்தீப் ஹூடாவின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு சிகிச்சை பெற்று வந்த ரன்தீப், நன்றாக நடப்பதற்காக இப்போது பயிற்சி எடுத்து வருகிறார். இத்தகவலை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் விரைவாக குணமாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.