‘வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் – அந்த வாழ்க்கையில், வாலிபம் கொஞ்சம் நேரம் தான்’ (Life is short. Have an affair) என்பதையே கொள்கையாகக் கொண்டு, கள்ளக்காதலர்களுக்கு தரகு வேலை பார்த்துவந்த பிரபல இணையதளம் ஆஷ்லி மேடிசன். இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தது ஆஷ்லி மேடிசன்.
உள்ளூரில் கணவன் இல்லாத போது, உள்ளூர்வாசியுடன்.., வெளிநாட்டு பயணத்தின் போது மனைவி உடன் வராத போது அந்த நாட்டை சேர்ந்த புத்தம்புது சிட்டுடன் என அனைத்து வகையான ‘சேவைக்கும்’ இந்த இணையதளம் வழியமைத்து தருவதால் தமது கள்ளத்தொடர்புகள் எல்லாம் ரகசியமாகவே நடந்து வருவதாக இந்த அங்கத்தினர் கருதி வந்தனர். இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த ‘ஆஷ்லே மேடிஸன்’, உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி வேறு அளித்திருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்த இணையதளத்துக்குள் ஊடுருவிய சில ‘ஹேக்கர்ஸ்’ (இணையதள பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல் திரட்டை கண்காணித்து, திருடும் கும்பல்) மேற்கண்ட மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்?, இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ‘ஸ்வாஹா’ செய்து விட்டது. இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் ‘ஆஷ்லே மேடிஸன்’ நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்தது.
இந்நிலையில், 32 கோடி வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர் உட்பட திருடிய அனைத்து விவரங்களையும் அந்த ஹேக்கர்கள், இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார இதழான வொயர்ட் தெரிவித்துள்ளது. இந்த செய்தி ‘ஆஷ்லே மேடிஸன்’ அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க தொடங்கிவிட்டது.