சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் கேரளா மாநிலம் முழுவதும் உச்சகட்ட மருத்துவ கண்காணிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை காட்டிலும் அது தொடர்பான போலி செய்திகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக கேரளாவில் கொரோனா குறித்த தவறான செய்திகள் பெருமளவில் பரப்படுகிறது. இந்த போலி செய்திகளால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் போலி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்க முயற்சித்த 7 பேரை அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.