நடிகர் – சித்து ஜொன்னலகடா
நடிகை – ரேஷ்மி கெளதம்
இயக்குனர் – பிரவீன் சட்டரு
இசை – ஸ்ரீ சரண்
ஓளிப்பதிவு – ராம் ரெட்டி
நாயகன் சித்து, நரேஷ் இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். நரேஷ் மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.
யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், சித்து வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ரேஷ்மி கவுதம் மீது சித்துவுக்கு காதல் வருகிறது.
இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து சித்துக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் நரேஷுக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.
இதற்கிடையே சித்து, நரேஷ் திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசும் இவர்களை தேடுகிறது.
கடைசியில், சித்து, நரேஷ் இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், திருட்டு போன்ற காட்சிகளில் சித்து தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்ரத்தா தாஸுடன் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். நரேஷ் குருவாக வர, சித்து அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். நரேஷ் காமெடியால் சிரிக்க வைக்கிறார்.
ரேஷ்மி கவுதம் காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன் சட்டரு. முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
ஸ்ரீ சரண் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராம் ரெட்டி ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் ‘இம்சை அரசி’ குறைவான இம்சை.