இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது திட்டம் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அவர்தான் முதல்வராக வேண்டும் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் பதவிக்கு ஆசைப்படுபவனல்ல என்றும், தமிழகத்தில் நல்ல ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் கொண்டு வரவே கட்சி தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தனது கட்சிக்கு முக்கியமான மூன்று விதிமுறைகளையும் அவர் அறிவித்துள்ளார். ஆனால் அவர் முதல்வர் ஆக தான் விரும்பவில்லை என கூறியுள்ளது அவரது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த முடிவுக்கு ஒத்துக்கொள்ளாத அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ரஜினியே எங்கள் முதல்வர் என்று ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள நடைமுறைகளுக்கு மாற்றான பல்வேறு விதிமுறைகளை ரஜினி தனது கட்சிக்கு விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகளோடு பேசிய ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.
2017ல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் தற்போது அரசியலில் நுழைவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வரும் ரஜினிகாந்த் முக்கியமான மூன்று விதிமுறைகளை கூறியுள்ளார். அவையாவன..
கட்சியில் அதிக பதவிகள் கூடாது – தேர்தல் சமயங்களில் ஒரு கட்சிக்கு பல பதவிகள் தேவைப்படுகின்றன. தேர்தல் முடிந்த பின்பும் கட்சிகளில் அதிக பதவிகள் இருக்கும்போது ஊழல்கள் அதிகரிக்கின்றன. அதனால் தேர்தலுக்கு பிறகு தேவையான அளவு பதவிகளை மட்டுமே கட்சி கொண்டிருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு – கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்.எல்.ஏ சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால் வாய்ப்பு அளிக்கப்படும். இதுதவிர ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் அரசியலுக்கு கொண்டு வர திட்டம். இளைஞர்கள் சட்டபேரவை செல்ல பாலமாக ரஜினி இருப்பார்.
கட்சிக்கு தனி தலைமை, ஆட்சிக்கு தனி தலைமை – மற்ற கட்சிகளை போல கட்சி தலைவர், ஆட்சி தலைவர் என அனைத்து பதவிகளிலேயும் ஒரே நபரே இருக்க மாட்டார். ஆட்சியில் உள்ளவர்களை கட்சி தலைமை இடையூறு செய்யக்கூடாது. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுதான் என் நிலைபாடு. கட்சி தலைமை கொடுக்கும் வாக்குறுதிகளை ஆட்சி தலைமை மக்களுக்கு நிறைவேற்றி தர வேண்டும்.
இப்படியாக மூன்று விதிமுறைகளை விதித்துள்ளார் ரஜினிகாந்த். அன்றைய மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில் மூன்றாவது விதிமுறையை மட்டும் சொன்னதாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை. நான் முதல்வர் வேட்பாளரும் இல்லை என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது ஏமாற்றம் என்ன தற்போது தனது அரசியலுக்கு அவர் வைத்துள்ள திட்டம் என்னவென விளக்கம் அளித்தார். இதனோடு தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும் கூறினார்.
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன்.
முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை. இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் என்னிடம் கூறினார்கள். நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால் என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறினர். நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை.
இருப்பினும் எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை. நான் முதல்வர் வேட்பாளரும் இல்லை, நான் முதல்வர் ஆகப்போவதும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.