மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை ஊக்குவிக்கும் இந்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனா வைரஸுக்கு (கோவிட் 19-க்கு) ஹோமியோபதி முறையில் “சிகிச்சை” இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால் இதுபோன்ற ஆதாரப்பூர்வமான விளக்கங்களையும் மீறி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மாற்று மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி, இந்தியாவில் இதுபோன்ற செய்திகள் இணையதளங்களின் வழியாக தொடர்ந்து பரவி வருகின்றன.
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) , பாரம்பரிய மற்றும் மாற்று மருந்துகளை ஊக்குவிக்கிறது.
கொரோனா வைரஸின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன என்று ஆயுஷ் அமைச்சகம் இந்த ஆண்டு ஜனவரி 29 அன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.
“கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளைத் தடுக்க ஹோமியோபதி, யுனானி மருத்துவம் பயனுள்ளதாக இருக்கும் ” என்ற தலைப்பில் ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
கொரோனா வைரஸைத் தவிர்க்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதோடு, தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, ஹோமியோபதியின் ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
ஹோமியோபதி மருத்துவத்தின் கோட்பாடுகளின்படி, அதிகப்படியான தண்ணீருடன் சேர்ந்து உணவு ஒருவரின் வயிற்றுக்குள் செல்லும்போது, அவருடைய “நினைவகம்” உடலின் நோயெதிர்ப்பு செயல்முறையைத் தொடங்கிவிடும். ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிட்ட 30 சி டயல்யூஷன், பொதுவாக வயிற்றை அடையும் போது ஆர்சனிகம் மூலக்கூறு பூஜ்ஜியமாக மாறிவிடும்.
ஆர்சனிக் ட்ரையாக்ஸைட் நீர்த்துப்போனால் ஆர்சனிகம் உருவாகிறது. ஹோமியோபதியில் பல நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
30 சி நீர்த்துப்போன பிறகு ஆர்சனிகம் கிடைப்பதால், அதில் ஆர்சனிக்கின் அசல் மூலக்கூறு எதுவும் இருப்பதில்லை, எனவே இது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், இதன் விளைவு பயனற்றது என்றும் கருதப்படுகிறது.
அமைச்சகத்தின் செய்திக்குறிப்புக்கு விமர்சனங்கள் எழுந்த பின்னர், ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கடந்த வாரம் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் “உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று ஒருபோதும் கூறப்படவில்லை” என்று கூறினார்.
“பொது சூழலில்” ஆலோசனை வடிவில் இந்த குறிப்பு வெளியிடப்பட்டதாகவும் அது நோய்க்கு சிகிச்சையளிப்பது அல்ல என்றும் அமைச்சகம் கூறுகிறது.
பிப்ரவரி 4 ம் தேதி, அரசு வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் “ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையிலும், இந்த மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக மக்களிடையே அவநம்பிக்கையை பரப்பும் வகையிலும் சில ஊடகங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கொரோனா வைரஸை திறம்பட குணமாக்கும் என்று அமைச்சகம் வழங்கிய ஆலோசனையில் கூறப்படவில்லை அல்லது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உகந்தது என எந்தவொரு குறிப்பிட்ட மருந்தையும் பரிந்துரைக்கவில்லை” என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் காலம் கடந்து வெளியிடப்பட்ட இந்த விளக்கம் குறித்து சமீபத்தில் தி இந்து நாளிதழ் விமர்சித்துள்ளது. அரசால் முன்பு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு “மிகவும் பொறுப்பற்றது” என்று தி இந்து செய்தித்தாள் கூறியது.
“நாமே சுயமாக மருந்துகளை உட்கொண்டு சிகிச்சையளித்துக் கொண்டால், பாதிக்கப்பட்ட நபரைப் பற்றி யாருக்கும் தகவல்கள் தெரியவராது என்பதோடு, தொற்று இருக்கும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்” என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படிப்பட்ட விளக்கங்கள் கொடுத்தாலும், செய்திக்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்ட முழுமையற்ற தகவல்களில் பாதி அளவு, இந்திய சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் கோவிட் 19-ஐ குணப்படுத்த மாற்று மருந்துகள் இருப்பதாக பலர் இந்த செய்தியை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து ஆலோசனை கூறுகின்றனர்.
இந்தியாவில் உண்மைச் செய்திகளை சரிபார்க்கும் BOOM என்ற வலைத்தளம் இந்த செய்திகள் வைரலாவதைப் பார்த்த பிறகு, “ஹோமியோபதி மாத்திரைகள் கொரோட் வைரஸ் கோவிட் 19 பரவுவதைத் தடுக்க உதவும் என்ற கோட்பாட்டை ஆதரிக்கும் எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் இதுவரை நடைபெறவில்லை” என்று கூறியது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த செய்திகளை தி லாஜிக்கல் இந்தியன் வலைதளமும் ஆராய்ந்தது. சமூக ஊடகங்களை பரவலாக பயன்படுத்துபவர்கள், அமைச்சகத்தின் செய்தியை தவறாகப் புரிந்து கொண்டதை அது கண்டறிந்தது.
“ஆர்சனிகம் ஆல்பம் 30 கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குறைக்குமா அல்லது தடுக்குமா என்பது ஒருபோதும் சோதனை செய்யப்படவில்லை. எந்த சோதனையையும் அதை நிரூபிக்கவும் இல்லை” என்று இந்த வலைத்தளம் கூறியுள்ளது.
இதுபோன்ற பல அறிக்கைகள் அண்மையில் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டன. சமீபத்தில் நோய்களுக்கான ஹோமியோபதி சிகிச்சைக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தென்பகுதியில் 3,500 பேருக்கு 11,500 டோஸ் ஹோமியோபதி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன.
மருந்துப்பொருள் விநியோக நிகழ்ச்சியின் போது நியூஸ் மினிட் வலைத்தளத்திடம் பேசிய ஒரு மருத்துவ அதிகாரி, “இந்த மாத்திரைகள் கொரோனா வைரஸுக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான காய்ச்சலுக்கும் (சளி) பயன்படும். எந்தவொரு வைரஸின் தன்மையும் மற்ற வைரஸ்களிலிருந்து வேறுபட்டது. இந்த மருந்து சிகிச்சைக்காக அல்ல, தடுப்புக்கு மட்டுமே” என்று தெரிவித்தார்.
இருப்பினும், மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான சிகிச்சை பற்றிய தெளிவான தகவல்களும், விழிப்புணர்வும் இல்லாததால், பலர் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்த தயாராக இருந்தனர்.
நியூஸ் மினிட் நிருபரிடம் பேசிய ஒருவர், “கொரோனோ வைரஸ் குறித்து பல தவறான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. நாம் முழுமையாக தயார் நிலையில் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் கூட பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதால் கவலைப்படத் தேவையில்லை என்றும் மக்கள் சொல்கிறார்கள்”, என்றார்.
ஆயுஷ் அமைச்சகம் இந்திய பாரம்பரிய சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை மேம்படுத்துவதை கண்காணித்து வருகிறது. இந்த முறைகள் பல நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த ஒரு குறிப்பிட்ட பாணியிலான சிகிச்சை முறை ஹோமியோபதி. பின்னர் இது இந்தியாவில் பிரபலமானது.
தவறான அறிவியலை ஊக்குவித்ததற்காக ஆயுஷ்அமைச்சகம் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்து தேசியவாத அரசியலை ஊக்குவிப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, ஆனால் 2019 ல் வாஷிங்டன் போஸ்டில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவின் பழைய வரலாற்றைப் பாதுகாக்கும் பிரசாரத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஏற்றுக் கொண்டு வருகிறது.
இருப்பினும், 2017 ஆம் ஆண்டில் இந்திய அரசு நடத்திய ஆய்வில், நாட்டில் 93 சதவீதம் பேர் அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறையைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் கோவிட் 19-ஐ குணப்படுத்தும் சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது இதன் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக இதுவரை எந்த தடுப்பூசியும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் நிவாரணத்திற்காக மாற்று மருந்துகளைத் தேர்வு செய்கிறார்கள், ஆனால் கொரோனா வைரஸை மாற்று மருந்துகள் குணப்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது.
ஆனால் கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து தவறான செய்திகள் இந்தியாவில் மட்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்படவிலை. இங்கிலாந்து, அமெரிக்கா, கானா மற்றும் பல நாடுகளிலும் பகிரப்படுகின்றன.