லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் இருக்கும் நெருப்புக்கோழி முட்டைகள் குறித்த மர்மத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில நெருப்புக்கோழி முட்டைகள் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால், நெருப்புக்கோழிகள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவை அல்ல என்பதால், அந்த முட்டைகள் உண்மையில் எந்தப் பகுதியை சேர்ந்தவை என்பது மர்மமாகவே இருந்தது.
தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழு, அந்தத் நெருப்புக்கோழி முட்டைகள் பற்றிய வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர்.
5000 ஆண்டுகளுக்கு முன், வெண்கல மற்றும் இரும்பு யுகங்களில் ஐரோப்பா, மத்திய தரைக்கடல், மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் மக்கள் நெருப்புக்கோழி முட்டைகளை வர்த்தம் செய்தது தெரிய வந்துள்ளது.
பணக்கார நபர்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் இதுபோன்ற முட்டைகள் கண்டெடுக்கப்படுவதால், அலங்கரிக்கப்பட்ட நெருப்புக்கோழி முட்டைகள் ஆடம்பரப் பொருட்களாக இருந்திருக்கலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி திட்டத்தை தலைமை தாங்கும் டாமர் ஹோடொஸ்.
அதே போல அவை காட்டில் வாழ்ந்த நெருப்புக்கோழிகளா அல்லது மனிதர்களால் வளர்க்கப்பட்டவையா என்பதை கண்டறிவதிலும் ஹோடொஸின் குழு ஆர்வமாக இருந்தது.
நெருப்புக்கோழிகள் மிகுவும் ஆபத்தானவை என்பதால், அவற்றை பிடிப்பது என்பது மிக்ககடினம்.
எனினும், தற்காலத்தில் எகிப்து, இஸ்ரேல், ஜோர்டன், துருக்கி ஆகிய நாடுகளில் இருக்கும் நெருப்புக்கோழி முட்டைகளின் வேதியியல் கூறுகளை வைத்து பழைய முட்டை ஓடுகளை ஒப்பிட்டு அதன் வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் தற்போது அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் முட்டைகள், வடக்கு எகிப்து மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் (ஜோர்டன், சிரியா மற்றும் துருக்கி உட்பட) வர்த்தகம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
அதோடு அவை காட்டில் வாழ்ந்த நெருப்புக்கோழிகளின் முட்டைகள் என்றும் அதனை எடுக்க வர்த்தகர்கள் பெரிய அபாயங்களைச் சந்தித்திருக்கலாம் என்றும் ஹோடொஸின் ஆய்வு கூறுகிறது.
“முட்டைகளை எடுப்பது மிகவும் ஆபத்தானது. நெருப்புக்கோழிகள் மிகவும் ஆபத்தானவை. முதலில் அதன் முட்டைகள் எங்கிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். பின்னர் அவற்றை திருட வேண்டும்,” என்கிறார் ஹோடொஸ்.