ஆஃப்ரிக்க நாடான சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடங்கு செய்து பெண்ணுறுப்பை சிதைப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
14 வயதிலிருந்து 49 வயது வரை உள்ள சூடான் பெண்களில் 87 சதவீதம் பேர் பெண்ணுறுப்பு சிதைப்புக்கு ஆளாகியுள்ளனர் என ஐ.நா கூறுகிறது.
சூடானில் பெண்களின் பிறப்புறுப்பில் உட்புற மற்றும் வெளிப்புற இதழ்கள் மற்றும் யோனியை நீக்குவது வழக்கமானதாகும்.
பெண்ணுறுப்பு சிதைப்பால் பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உடலுறவின்போது வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கலாசார நம்பிக்கையினால் பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்து வருகிறது.
ஆனால் இப்போது உலகம் முழுவதும் இந்த முறை தடை செய்யப்பட்டு வருகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அளித்த தகவலின்படி ஏப்ரல் 22ஆம் தேதி பெண்ணுறுப்பு சிதைப்பை குற்றமாக்கும் சட்டத் திருத்தம் சூடானில் நிறைவேறியுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி மருத்துவமனையிலோ வெளியிலோ யாரெனும் பெண்ணுறுப்பை சிதைத்தால் அவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் .
யுனிசெஃப் அமைப்பின் தகவலின்படி ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 29 நாடுகளில் இப்பழக்கம் உள்ளது. அவற்றில் 24 நாடுகளில் இதற்கு எதிரான சட்டமும் உள்ளது.