இந்தியாவில் பொதுமுடக்கத்தின் நீட்சி பெரும்பான்மை மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதன் விளைவால் உண்டாகும் தனிமை, வீட்டிலே முடங்கி இருப்பதால் எழும் மனஅழுத்தம், மது கிடைக்காமால் அதனால் வெளிப்படும் ஆக்ரோஷம், அதிகரித்துவரும் சிறார் பாலியல் காணொளி நுகர்வு கலாசாரம், லூடோ பப்ஜி போன்ற இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் என மனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்திருக்கிறது கொரோனா வைரஸின் ஊரடங்கு காலம். ஒரு சராசரி மனிதன் இந்த பொதுமுடக்கத்தை வெற்றிகரமாக கடப்பது எப்படி என்பது குறித்து சென்னையை சேர்ந்த உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்திடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.
சென்னையில் உளவியல் மற்றும் மனநலம் சார்ந்து ‘மனஸ்’ என்ற ஓர் அமைப்பை சித்ரா நடத்தி வருகிறார். இந்தத் துறையில் கடந்த 2 தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
கேள்வி – பொதுமுடக்கத்தால் மனதில் ஏற்படும் தனிமை மற்றும் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது?
பதில் – ஒருவருக்கு மனநலம் சார்ந்து ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்றால் அவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். ஒருவர் புதிதாக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார் என்றால் அவர் எதிர்பார்த்தது நடக்காமல் போயிருக்கலாம் என்ற விரக்தி காரணமாக இருக்கலாம். தனிமையை போக்குவதற்கான ஒரே தீர்வு சமூகத் தொடர்புதான். தனிமையாக உணருபவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்து எதனால் இந்த தனிமையை நாம் உணர்கிறோம் என்று ஆராய்ந்து மனதுக்கு நெருக்கமானவர்களுடன் பேச முயற்சிக்க வேண்டும். இப்படியான காலக்கட்டத்தில் நிச்சயமாக எல்லோரும் ஒரு தீர்க்கமான இலக்கை கொண்டிருக்க வேண்டும். அதை தினந்தோறும் ஒரு பழக்கவழக்கமாக கடைப்பிடிக்கும் போது மனது புத்துணர்வு பெறும். இது எதுவுமே இல்லாமால் அப்படியே படுக்கையிலே படுத்திருப்பது மனஅழுதத்தைதான் தரும்.
ஒருவர் தான் எதற்கும் லாயக்கற்றவன் என்று நினைக்கும் மனநிலையில் இருப்பவன்தான் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். நம்மை நாமே பல்வேறு விஷயங்களில் ஈடுபடுத்தி கொள்வதன் மூலம் இந்த மனஅழுதத்தை உடைக்க முடியும். சிலர் கடந்த காலத்தை எண்ணியே நிகழ் காலத்தை வீணடிப்பார்கள். அடுத்து என்ன என்ற எண்ணம்தான் அவர்களுக்குள் இருக்க வேண்டும். இந்த வாழ்க்கைகான நோக்கத்தை உணர வேண்டும். எப்போதும் நேரம் காலம் தெரியாமல் தூங்குவது, கைப்பேசியை எந்நேரமும் நோண்டி கொண்டிருப்பது மனஅழுத்த உணர்வை மேலும் அதிகரிக்கும்.
கேள்வி – வீட்டிலேயே அடைந்து கிடப்பவர்களுக்கு லூடோ, பப்ஜி போன்ற கேம்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவை எந்தளவுக்கு தீர்வைத் தரும்?
பதில் – மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்த மீள பல்வேறு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். அதில் இதுவும் ஒருவகைதான். இங்கு கேம் ஆடுவது பிரச்சனையே அல்ல. ஆனால், அந்த விளையாட்டை நீங்கள் எத்தனை மணி நேரம் தொடர்ந்து ஆடுகிறீர்கள் என்பதுதான் பிரச்சனை. அந்த கால அளவு உங்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமே தவிர. அந்த கேம் உங்களை கட்டுப்படுத்த கூடாது. இது கிட்டத்தட்ட மதுவுக்கு அடிமையாவது போன்றுதான். அதுபோன்று அடிமையாகுபவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம், இலக்கு என்பது இருக்காது. வலியை மறந்து எதார்த்தத்திலிருந்து விலகியே இருப்பார்கள். இப்போதுள்ள சூழலில், நம்மால் மின்னணு சாதனங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டும் இருக்க முடியாது. குழந்தைகளுக்கு ஊடரங்கு காலத்தில் அப்படி ஒருநேர கட்டுப்பாடு இருக்குமானால், ஒருநாளைக்கு 3 லிருந்து 4 மணி நேரத்துக்கு மேல் அவர்களை கேம் விளையாட அனுமதிக்கக்கூடாது. காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் எனப் பெற்றோர்கள் பிரித்து கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அனுமதிக்க வேண்டும். இப்படி பெற்றோர்கள் குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.
பெரியவர்களை பொறுத்தவரை அவர்கள் சராசரியாக ஒருநாளைக்கு ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் மட்டுமே இதுபோன்று கேம்களில் செல்விடலாம். ஒருவேளை நீங்கள் இரண்டு மணி நேரத்தையும் தாண்டி தொடர்ந்து மூன்று நான்கு மணி நேரம் என்று விளையாடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது நாளடைவில் உங்கள் மனநலத்தை பாதிக்கும்.
கேள்வி – இதிலிருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
பதில் – பிள்ளைகளுடன் அமர்ந்து பெற்றோர்கள் பழங்கால பலகை விளையாட்டுகளை ஆடலாம். கைப்பேசியை தொடவே கூடாது என்று பெற்றோர்கள் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக சுய ஒழுக்கத்தை கற்றுத் தரலாம். இத்தனை மணிக்கு கைப்பேசியை எடுத்துவிட்டு ஒருமணி நேரத்தில் அதே இடத்தில் வைத்துவிட வேண்டும் என்ற பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு திரைப்படத்தை காணலாம். ஒரே வீட்டில் இருந்தும் மகனுக்கும் அப்பாவுக்குமான உரையாடல் என்பது இப்போது வாட்ஸ்ஆப்பிலே முடிந்து விடுகிறது. அந்த உரையாடல் தந்தைக்கும், மகனுக்கும் நேருக்கு நேர் நடக்கும் போது, இருவருக்குமே அது மிகப்பெரியளவில் பயன் தரும். இப்போதுள்ள குழந்தைகள் கேம் விளையாடும்போது, தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், நிஜ உலகில் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் நேர்மறை விஷயங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும். பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த காலத்தில் தங்களை தாங்களே சுய மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். அதேபோல், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்பாடு ஆகட்டும், தூக்கத்தை தொலைத்து நெட்ஃபிளிக்ஸில் சீரிஸ் பார்ப்பதாகட்டும் எல்லாவற்றுக்குமே ஒரு கால வரையறை இருக்கிறது. அதற்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் அவை அனைத்துமே ஒரு அங்கம்தானே தவிர அவையே வாழ்க்கை அல்ல. இந்த அதீத நுகர்விலிருந்து விடுபட இளைஞர்கள் தங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு இயங்க வேண்டும். இல்லையெனில், இந்த அதிக நுகர்வுகூட மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
கேள்வி – ஊரடங்கு காலத்தில் ஆபாசப்படம் பார்பவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை நாம் எப்படி எடுத்து கொள்வது? இது ஆரோக்கியமான விஷயமா?
பதில் – எல்லோரும் இப்போது வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். பலர் தங்கள் காதல் துணையை சந்திக்க முடியாமல் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற காலக்கட்டத்தில் ஆபாசப்பட தளங்களை நோக்கிச் செல்கிறார்கள். எப்போதும் மனது மகிழ்ச்சித் தரக்கூட விஷயத்தைத்தான் தேடுமே தவிர சோகத்தை அல்ல. நன்றாக சாப்பிடுகிறோம் அடுத்து செய்வதற்கு வேலை எதுவுமில்லை என்னும் நிலையில், மனது இயல்பாகவே இதைத்தான் தேடும். அதனால்தான் இந்த அதிகரிப்பு. ஆபாசப்படங்கள் பார்ப்பதில் எவ்வித தவறுமில்லை. என்னை பொறுத்தவரை அவை ஆரோக்கியமான விஷயம்தான். தினமும் ஒருமணி நேரம் ஆபாசப்படங்கள் பார்ப்பதால் தவறில்லை. ஆனால், அதற்கு அடிமை ஆகக்கூடாது. ஆபாசப்படம் பார்க்காமல் என்னால் இயல்பாகவே இருக்க முடியாது என்று சொல்வதுதான் தவறு. சிறார் பாலியல் காணொளிகள் காண்பது தவறு. அதேபோல், சமூகத்துக்கு முற்றிலும் எதிரான BDSM போன்ற ஆபாசப்படங்களை பார்ப்பது என்பது முற்றிலும் தவறான விஷயம்.
கேள்வி – சில நேரங்களில் ஆபாசப்படம் பார்ப்பதைகூட சிலர் குற்ற உணர்ச்சியாக கருதுகிறார்களே?
பதில் – இது ஒவ்வொருவருக்கு இருக்கக்கூடிய மனநிலையை பொருத்து மாறக்கூடியது. சிலர் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு பல மணி நேரம் குற்ற உணர்ச்சியில் தவிப்பார்கள். அப்படி நீங்கள் தவிக்கிறீர்கள் என்றால் அடுத்தமுறை ஆபாசப்படங்களை பார்க்காதீர்கள் என்றுதான் நான் சொல்வேன். குற்ற உணர்ச்சியையும் மீறி நீங்கள் அதே காரியத்தை செய்தீர்கள் என்றால் நிச்சயம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் அப்படி ஆபாசப்படங்களை பார்ப்பதை தவிர்க்க நினைக்கிறீர்கள் என்றால் முதலில் அதைப்பற்றி நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். அதுமாதிரியான சமயங்களில், பிரார்த்தனையில் ஈடுபடுவது சமையலறைக்கு சென்று அம்மாவுக்கு உதவுவது என உங்களை நீங்களே அதுபற்றிய சிந்தனையை திசைத்திருப்ப வேண்டும். இயல்பாகவே உங்களுக்கு எழும் பாலியல் ஆசைகளை சுய இன்பம் மூலம் நீங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் செய்யும்போது, ஆபாசப்பட இணையதளங்களை நோக்கிச் செல்வதை நீங்களே குறைத்து கொள்வீர்கள். சுய இன்பம் கொள்வதால் சிறார் பாலியல் காணொளிகளை காண்பதும், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு தாக்குதல்களும் குறையும்.
கேள்வி – ஆபாசப்படத்தை போன்று இதே காலக்கட்டத்தில் மது போதையை கட்டுப்படுத்த முடியாமல் வார்னிஷை குடித்து மரணிக்கிறார்கள்? பொதுமுடக்கத்தை பயன்படுத்தி மதுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து மீள முடியுமா?
பதில் – இது ஒருவருடைய மன உறுதியை சார்ந்த பிரச்சனை. குடியைவிட வேண்டும் என்று அவர் முதலில் நினைக்க வேண்டும். ஐய்யப்பனுக்கு மாலை போடும்போது மட்டும் குடியை நிறுத்தமுடியும் போது, ஏன் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களால் நிறுத்த முடியாதா? உளவியல் ரீதியாக குடிப்பழக்கம் என்பது ஒரு நோய். தனி மனிதன் சார்ந்து மட்டுமின்றி ஒரு குடிகாரரால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. ஒருவர் தனது குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வார்னிஷை குடிக்கிறார் என்றால் அவர் அவருடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை என்றுதான் அர்த்தம். கள்ளச்சாராயம் குடித்து சாவதற்குகூட தயாராக இருக்கிறார்கள் என்கிற நிலையில், மனிதத்தன்மையை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். 21 நாள் பழக்கம் நம்மால் எதையும் பழக்கப்படுத்தவும் முடியும், ஒரு பழக்கத்தை விடவும் முடியும். நிச்சயமாக குடியிலிருந்து விடுபட நினைக்கும் மது நோயாளிகளுக்கு மனநல மருத்துவர்களின் ஆலோசனை என்பது அவசியம் தேவை. அது இல்லாமல் அவர்களை குணப்படுத்த முடியாது.
தீவிர குடி நோயாளிகள் அப்பழக்கத்திலிருந்து மீண்டு வரும்போது, கோபம், கைநடுக்கம் போன்ற பல அறிகுறிகள் தெரியும். அவர்களுக்கு மருந்துகள் மூலம்தான் அந்த பழக்கத்திலிருந்து விடுபட வைக்க முடியும். அந்த அறிகுறிகளை மன தைரியத்துடன் ஒருவர் வெற்றிகரமாக கடந்துவிட்டார் என்றால் அவரை எளிதில் மீட்டு விடலாம். சோஷியல் டிரிங்கிங் பழக்கம் உள்ளவர்கள் இதிலிருந்து மிகச்சுலபமாக மீட்டுவிடலாம். சிலர் நம்பிக்கை சார்ந்து இந்த பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். குடித்தால் உடலுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். சிலர் ஒரு பிரச்சனைக்கு தீர்வாக மது குடிக்கிறார்கள். உளவியல் நிபுணரின் தலையீடு இருக்கும் பட்சத்தில், ஒருவரின் குடிப்பழக்கத்துக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டால் அவரை சுலபமாக மீட்டு விடலாம். தொலைக்காட்சியில் விளம்பரம் கிடையாது, ஒருவரால் வெளியேவும் போக முடியாது என்பதால் குடிப்பழக்கத்தை விடுவதற்கு மிகச்சரியான காலக்கட்டம் இது. இதை குடிநோயாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒருவர் வெற்றிகரமாக ஒருவாரத்துக்கு குடியைப் பற்றி மறந்துவிட்டார் அவர் அதை ஒரு டைரியில் குறித்து கொள்ளலாம். இப்படி இரண்டு மூன்று முறை இலக்கு வைத்து கொண்டால் நிச்சயம் ஒருவரால் இந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியும்.
கேள்வி – ஊரடங்கால் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் எத்தகைய பணி சுமையை எதிர்கொள்கிறார்கள்?
பதில் – பெண்களின் முக்கியத்துவத்தை குடும்பத்தினர் உணர வேண்டும். முன்பு, பிள்ளைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு அவர்களுக்கான ஒரு நேரம் என்று இருந்தது. ஆனால், இப்போது சூழல் முற்றிலுமாக மாறி இருக்கிறது. இந்த காலக் கட்டத்தில் பெண்கள் சற்று கண்டிப்புடன் இருக்கத்தான் வேண்டும். பிள்ளைகளாகட்டும், கணவனாகட்டும், வீட்டு பெரியவர்கள் ஆகட்டும் சண்டைப் போடமல் ‘முடியாது’ என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல, வீட்டு வேலைகளில் கணவனையும், பிள்ளைகளையும் ஈடுபடுத்த வேண்டும். சில கணவன்கள் எதற்குமே ஒத்துழைக்க மாட்டார்கள். சில பிள்ளைகள் என்ன சொல்கிறோமோ கேட்டு கொள்வார்கள். ஒவ்வொரு வீட்டு வேலையையும் பெண்கள் இழுத்துப்போட்டு கொள்ளாமல் சின்ன சின்ன வேலைகளை குழந்தைகளிடமும் பிரித்து கொடுக்கலாம்.